வியாழன், 11 ஜனவரி, 2018

விரிசல் - கவிதை நூல் விமர்சனம் - மோ.கணேசன், புதியதலைமுறை கல்வி வார இதழின் தலைமை உதவி ஆசிரியர்

         விரிசல் - கவிதை நூல் விமர்சனம்
    - மோ.கணேசன்,  புதியதலைமுறை கல்வி வார இதழின் தலைமை உதவி ஆசிரியர்
          புதுக்கோட்டையில் மாதா மாதம் கவியரங்கங்களும்... கவிஞர் கூடுகைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அங்கே கவிஞர் முத்துநிலவன், கவிஞர் தங்கம் மூர்த்தி என பலரும் இளைய கவிஞர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த புதுக்கோட்டையில், நடைபெற்ற புத்தக கண்காட்சியில்... சோலச்சி என்பவரின் விரிசல் எனும் கவிதை நூலை வெளியிட்டனர். இந்த வெளியிட்டனரில் நானும் அடக்கம் என்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு..
    அவரின் கவிதை நூலை நேற்று வாசித்து முடித்தேன். இந்த கவிதைப் புத்தகத்தை பதிப்பித்த மேன்மை வெளியீட்டிற்கு எனது வாழ்த்துகள். இவர்களைப் போன்றோரின் ஊக்கமே... கவிஞர்கள் வளரக் காரணம்.
   இனி கவிதைத் தொகுப்பிற்கு வருகிறேன்...



   பள்ளி ஆசிரியரான சோலச்சி சமூகம் சார்ந்த தனது பார்வைகளை கவிதைகளாக்கி இருக்கிறார். மொத்தம் 77 கவிதைகள். இவற்றில் சில கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களில், கவிதை மன்றங்களில் வாசித்த கவிதைகளையும் தொகுத்திருக்கிறார். கவிதை புத்தகத்திற்கே உரிய வடிவமைப்பு நேர்த்தியாக இருக்கிறது. வெற்று இடங்களில் ஓவியங்களை வரைந்திருக்கலாம்.
   அதில் பட்டென்று மனதிற்கு பிடித்த கவிதை ஒன்று...
   குருதி
    ---
இப்போதுதான்
நடந்திருக்கும்
அந்த படுகொலை
வழியும் குருதியோடு
வாகனத்தில்...
ஆற்று நீரில்
அள்ளிய மணல்
'அவிழ்த்து விடச்சொல்' என்ற தலைப்பில் ஐல்லிக்கட்டு போராட்டத்தை எழுதியிருக்கிறார்.
அதில் எனக்கு பிடித்த வரிகள்...
'கரங்கள் யாவும்
ஒன்று சேர்ந்தால்
காவு வாங்க
வாய்ப்பேது ...’
‘துரோகிகளின்
தோலுரிப்போம்
தோலை
தவிலாக்குவோம்...’
   'நாடக மேடை’ எனும் கவிதையில்... கிராமத்தில் ரெக்கார்டு டான்ஸ் ஆடும் பெண்ணின் வலியை சொல்லியிருந்த விதம் நெகிழ்ச்சி.
   'கேட்டதை எல்லாம்...' என்ற தலைப்பில் அப்பாவைப் பற்றிய கவிதை அருமை...
அதில் ஒரு வரியை சற்று மாற்றி இருக்கலாமோ என்று தோன்றிற்று... அப்பாவிடம்
‘உம்மால் முடிந்ததையே
நாங்களும் கேட்டு வைப்போம்’ என்று எழுதியிருந்தார்.
அப்பாவினால் முடியாததைக் கூட குழந்தைகளாகிய நாம் கேட்டுவைப்போம். அவரும் பல நேரங்களில் மனவருத்தம் கொண்டிருப்பார் நாமறியாமல்.
கறுப்பு சாயம் எனும் தலைப்பிலான கவிதையில்... அரசியல் நையாண்டியைப் புகுத்தியிருக்கிறார்.
   வண்டியை ஓட்டிக்கொண்டே அலைபேசினால் வரும் ஆபத்தை... அழைப்பு என்ற தலைப்பில் எழுதியிருந்தது நறுக்கென்று இருந்தது.
காதோடு அலைபேசி
களிப்போடு
மனசு...
வேகமாய் வண்டி
உடைந்து நொறுங்கியது
வாழ்க்கை..!
   புனிதம் என்ற தலைப்பில்... கோவில் எனும் பெயரில் மூடநம்பிக்கை நடைபெறுவதை சாடியிருக்கிறார்...
   இக்கவிதைத் தொகுப்பில் ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் தலைதூக்குவது.. சற்று அயர்ச்சியைத் தருகிறது.
   வாழ்த்துகள் சோலச்சி... உங்களின் நான்காவது நூலான 'விரிசல்’ மேன்மை பெறட்டும்.
                            வாழ்த்துகளுடன்
                            மோ.கணேசன் 
                       பேச: 9444296929
குறிப்பு :
        மாம்பழம் விளையும் மாவட்டத்தில் கிச்சடி சம்பாவிற்கு பேர்போன ஆத்தூரில் மோகன்ராஜு, வள்ளி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக ஏப்ரல் 6, 1981-இல் பிறந்தவர் மோ.கணேசன். நான் பிறந்தது நவம்பர் 11, 1982. அவரை விட நான் வயதில் சிறியவனானாலும், தோழர் என்று அன்போடு அழைத்து, உரிமையோடு பழகுபவர். அவருடைய நட்பு முகநக நட்பல்ல. அகம் சார்ந்த அன்பு நிறைந்த நட்பு.
    எனக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள எல்லா அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் நண்பராக இருப்பவர். நிறைய அரசுப்பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்று, ’நான் அரசுப்பள்ளியில் படித்த மாணவன் என்றும், முதல் தலைமுறை பட்டதாரி என்றும், நீங்களும் படித்தால் என்னைப் போல வரமுடியும்’ என்றும் மாணவர்களை உற்சாகப்படுத்துவார். நிறைய அரசுப்பள்ளி ஆசிரியர்களின் திறன்களை பத்திரிகை உலகில் வெளிச்சமிட்டுக் காட்டியவர். 
    இலக்கிய உலகில் தனக்கென ஓர் உயரிய இடத்தை பெற்றிருக்கும் நண்பர் மோ.கணேசன் அவர்கள் மேன்மேலும் உயர நான் மனசார வாழ்த்தி மகிழ்கிறேன்.
       ஏழைக்குடும்பத்தில் பிறந்து, வறுமையை வென்று, எம்.ஏ இதழியல் முடித்து, பத்திரிகை உலகில் 17 ஆண்டுகாலமாக இருக்கிறார். அவர் விமர்சனம் செய்தது எனக்கு பெருமகிழ்ச்சி…
      நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே....
                     நட்பின் வழியில்
                         சோலச்சி  9788210863

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக