சனி, 20 ஜனவரி, 2018

"புத்தனைத்தேடும் போதி மரங்கள் " - சோலச்சி

கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்களின் "புத்தனைத் தேடும் போதி மரங்கள் " என்ற கவிதை  நூல் ஒரு பார்வை...
       - சோலச்சி புதுக்கோட்டை
வெளியீடு :
தமிழ்மொழி பதிப்பகம்
01, முருகன் கோயில் தெரு,
சண்முகாபுரம், புதுச்சேரி  - 605009
பேச : 7418477364
மொத்த பக்கங்கள் : 96
விலை  :ரூபாய் 100
பதிப்பாண்டு : 10.10.2017
தமிழ்கூறும் நல்லுலகில் எண்ணற்ற நூல்கள் மலை போல் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இதில் கவிதை நூல்கள் அதிக இடத்தைப் பிடிக்கின்றன என்பதில் ஒருபோதும் ஐயமில்லை.  காரணம் கணக்கில்லாமல் கவிஞர்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றனர். இதை தமிழுக்கு கிடைத்த பெருமையாகவே நான் கருதுகின்றேன்.

  புரட்சிகளின் பிறப்பிடமாய் போர்க்களமாய் திகழ்ந்த மண் புதுச்சேரி.  இந்தப் புதுச்சேரியில் புதிய புரட்சிக்கு களம் அமைத்து கவிதைக் களத்தில் களமாடிக்கொண்டு இருக்கிறார் கவிஞர் கு.அ.தமிழ்மொழி. பெயரிலேயே தனது மொழியை வைத்திருக்கும் இவர் தாய்மொழியாம் தமிழை மிக அழகாக கையாண்டு இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.  தமிழ் இவருடன் அழகாய் விளையாடுகிறது என்று சொன்னாலும் மிகையில்லை உண்மைதான்.
  "புத்தனைத் தேடும் போதி மரங்கள் " என்ற தலைப்பு எல்லோரையும் ஈர்க்கக் கூடியதாகவே இருக்கிறது.  பல நேரங்களில் தலைப்புக்கும் கருத்துக்கும் பொருத்தம் இல்லாமல் போய்விடும்.  ஆனால் இந்த நூலில் உள்ள துளிப்பாக்கள் அனைத்தும் தலைப்புக்கு ஏற்றபடி மிக நேர்த்தியான முதிர்ச்சியானவையாக இருப்பது பாராட்டுக்குரியது. மனசார பாராட்டி மகிழ்கின்றேன். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே இவர் தனது முதல் நூலை வெளியிட்டு தலைநகர் தில்லியில் தேசியக் குழந்தை விருதும் பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
  நூலின் முதல் கவிதையிலே முத்திரை பதிக்கிறார் கவிஞர்.
  "வீடு திரும்பி இருக்குமா
    துணைக்கு வந்த பட்டாம்பூச்சி
   திடீர் மழை....!"
  ஆழ்ந்து நோக்கினால் இதில் பொதிந்திருக்கும் கருத்து புலப்படும். இவர் இளம் வயதுக் கவிஞர் என்பதால் பட்டாம் பூச்சி என்று தனது தோழியை குறிப்பிடுகிறார் என்றே நான் கருதுகிறேன்.   தன் தோழி தன்னை வீட்டில் விட்டுவிட்டு தூரத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும்.  வழியில் மழை வந்தாக் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாத வழி. கொஞ்ச நேரத்தில் மழை வந்து விட்டது.  கையில் குடையும் இல்லை.  வருந்துகிறார் கவிஞர்.  தன் தோழி வீட்டுக்கு போனாளோ இல்லையோ தெரியவில்லையே... மழை வேறு வந்து விட்டதே என்று பதறுகிறார். இப்போது அந்தக் கவிதையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள். உள்ளுக்குள் உங்களையும் அந்தக் கவிதை ஏதோ ஒரு விதத்தில் கட்டிப்போட்டுவிடும்..
  இன்று புகைப்படம் எடுப்பது என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. செல்பி (சுயமி) வந்துவிட்டது.  முன்னரெல்லாம் புகைப்படம் எடுப்பதென்றால் புகைப்பட கடையில் தவம் இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.  அந்தச் சூழ்நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்றும் பொக்கிசமாய் பாதுகாக்கப்பட்டு வருகின்றோம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதுதான் முதல் முதலில்  என்னை புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் இலவச பேருந்து அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படம்தான் நான் எடுத்த முதல் புகைப்படம்.  அதில் பள்ளியின் முத்திரை குத்தப்பட்டிருக்கும். முத்திரை குத்தப்பட்ட அந்த புகைப்படத்தை பாதுகாத்து வருகிறேன்.
  "பழைய புகைப்படம்
கரையானின் கரிசனம்
விட்டு வைத்தது என் முகத்தை.."
  என்று புகைப்படம் பற்றி குறிப்பிட்டு நம்முடைய பழைய நினைவுகளை தூண்டிவிட்டு நம்ம உருகச் செய்துவிடுகிறார் கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்கள்.
  "காசுக்கு ஓட்டு
நமக்கு நாமே
வைத்துக்கொள்ளும் வேட்டு " என்று எனது கவிதையொன்றில் நான் சொல்லியிருப்பேன். கவிஞரும் தனது நூல் மூலமாக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். குற்றம் சாட்டுவதோடு விட்டுவிடாமல் வருந்துகிறார். ஆம் இதோ அந்த கவிதை ...
  "உரிமை தான்
இருந்தும் பயனில்லை
வாக்கு ...."
  என்று தனது ஆதங்கத்தை ஆணித்தரமாக பதிவு செய்கிறார்.  தனது கவிதையில் கேலியும் கிண்டலும் நடனமாடுவதை கவிஞர் உறுதி செய்திருக்கிறார். பெண்கள் தண்ணீர் பிடிக்கும் போது சில நேரங்களில் நீர் நிறைந்து வழிவது கூட தெரியாமல் தங்கள் பேச்சில் மூழ்கி இருப்பது இயல்பு. இந்தக் காட்சியை இவ்வாறு நகைச்சுவையோடு பதிவு செயகிறார்.
  "தண்ணீர் குழாய்
வழிந்த நீர் கேட்கிறது
ஊர்ப் பேச்சு..."
  ஈழப் படுகொலையை அருகில் இருக்கும் இந்தியா இரக்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது என்பது நாமறிந்த உண்மை. அந்தக் கொடூர காட்சியை புறா வழியாக உலகுக்கு புரியவைக்கிறார் கவிஞர்.
  "அமைதிப் புறா
குண்டடிபட்டு சிவப்பானது
ஈழப் படுகொலை ..."
  ஈழ மண்ணில் வெள்ளைக் கொடி ஏந்தி வந்த எத்தனையோ நம் உறவுகளை ஈவு இரக்கமின்றி சிங்கள அரசு கொன்று குவித்த நிகழ்வினை எவ்வாறு நாம் மறந்துவிட்டு போக முடியும் . இதை வாசிக்கும்போது என் கண்கள் குளமாகிப் போகிறது.
  தெர்மாக்கோலில் தண்ணீரை மூடுவது , கடலில் கொட்டிய எண்ணெய்யை வாளியில் அள்ளுவது போன்ற கோமாளித்தனமான வித்தைகள் காட்டி நம்மை மேலும் முட்டாளாக்க நினைக்கும் சதித்திட்டமெல்லாம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் நடைபெறாது.  சப்பானில் எதிரியாக இருந்தால் கூட ஓடவிட்டு வெல்வதுதான் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.  சப்பானியர்களின் ஒட்டுமொத்த நோக்கம் சப்பான் முன்னேற வேண்டும் என்பதுதான். ஆனால் இந்தியாவில் அப்படியா என்று நீங்கள்தான் முடிவு சொல்ல வேண்டும்.
  தனது கவிதையில் அழகாக எள்ளி நகையாடுகிறார் கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்கள்.
  "கடலில் எண்ணெய்
வாளியில் அள்ளுது
வல்லரசு இந்தியா..."
     இரவு நேர நடை பயணம் மேற்கொள்கிறார் ஒருவர்.  வழியில் தாகம் எடுக்கிறது.  யாரிடமாவது தண்ணீர் கேட்கலாம் என்றால் வழியில் எந்த வீடுகளும் இல்லை. தாகம் வேறு தணியவில்லை.  நாக்கு வறண்டுவிட்டது. சுற்றும்முற்றும் பார்க்கிறார் அவர். தூரத்தில் குடிநீர்க் குளமொன்று இருப்பது அந்த நிலவொளியில் அழகாய் தெரிகிறது.  வேகமாக செல்கிறார். அந்தக் குளத்தில் வான் நிலவு வசதியாக உறங்கிக்கொண்டு இருக்கிறது.  கைகளால் அள்ளிக் குடிக்கும்போது நிலவின் தூக்கம் களைந்து விடுமோ என்று அந்த வழிப்போக்கர் அச்சப்படுகிறார். இதைத்தான்
  ""நிலவை எழுப்பாமல்
நீர் குடிப்பதெப்படி?
கரையில் நான்....""
  என்று மிக நேர்த்தியான சொற்களால் நம்மை வசீகம் செய்துவிடுகிறார் கவிஞர் கு.அ.தமிழ்மொழி.
   நூல் தலைப்பு கவிதை நம் நெஞ்சை  சுடுகிறது.... நாம் இப்போது எதை நோக்கி போய்க்கொண்டு இருக்கின்றோம் என்ற கேள்வியை நம் நிறுத்துகிறது.
"புத்தனைத் தேடும்
போதி மரங்கள்
எண்திசையிலும் போர்க்குரல்.."
  இவருடைய துளிப்பாக்கள் அச்சு அசலாய் மின்னுகின்றன. நிச்சயம் இவர் இத்தரணியில் ஒளிவீசுவார் என்று நம்புகின்றேன்.
  அய்க்கூ உலகின் கதாநாயகன் அருமைக் கவிஞர்  தோழர் இரா.இரவி அவர்கள் , இலங்கை தோழர் மலையகம் மு.சிவலிங்கம் அவர்கள்,  அருமைத் தோழர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா போன்றவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பு செய்திருக்கிறார்கள்.
    கவிஞர் கு.அ.தமிழ்மொழி அவர்கள் மேன்மேலும் கவிதைகள் படைத்து இந்தச் சமூகத்தின் போராளியாக விளங்கி சீர்மிகு சமூகம் படைக்க தன்னால் இயன்றவரை களமாட வேண்டுமாய் வாழ்த்தி மகிழ்கின்றேன்....
      - அன்பு பண்பு
        பாசம் நட்பின் வழியில்
         எந்நாளும்
        கவிமதி சோலச்சி

சனி, 13 ஜனவரி, 2018

பொங்கலே பொங்காதிரு... - சோலச்சி

நெல்லை விளைவித்த
வயல்காடு
சாவையும்
சாவியையும்
அறுவடை செய்தபடி...!

கழனியில்
கால் வைக்காதவர்கள்
கொண்டாடி மகிழ்கின்றனர்
பொங்கி...!!!

எல்லோருக்கும்
சோறு போட்டவன்
கண்கள் நீரின்றி
அழுகின்றன
வீங்கி ....!!!

பாழடைந்த
பங்களாவைப் போல்
குடல் வெடித்து
கிடக்கிறது
வயல்காடு...

எங்கோ
ஒரு விவசாயி
விளைவித்த
கரும்புக்கும் அரிசிக்கும்
முண்டியடிக்கிறது
ரேசன் கடைக் கூட்டம் ....

இலவச கரும்பும்
உப்புகரிக்கின்றது
வரிசையில் நின்ற
விவசாயிக்கு....!

இப்போதெல்லாம்
சாதிய அரசியலைவிட
விவசாய சாவு
அரசியலே
பிரபலமாகிறது....!

சோறு வேணுமாம்
உழவர்
உசுரு வெறும் மசுராம்....!

உழவர்
ஏர் கலப்பை தூக்கி
ஆள்வோர்
நெத்தியில்
அடிக்கும் நாள்
எந்நாளோ....!

பொங்கலே
பொங்காதிரு
உழவர்
பொங்கி எழட்டும்.....!!!

   - சோலச்சி புதுக்கோட்டை

வியாழன், 11 ஜனவரி, 2018

விரிசல் - கவிதை நூல் விமர்சனம் - மோ.கணேசன், புதியதலைமுறை கல்வி வார இதழின் தலைமை உதவி ஆசிரியர்

         விரிசல் - கவிதை நூல் விமர்சனம்
    - மோ.கணேசன்,  புதியதலைமுறை கல்வி வார இதழின் தலைமை உதவி ஆசிரியர்
          புதுக்கோட்டையில் மாதா மாதம் கவியரங்கங்களும்... கவிஞர் கூடுகைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அங்கே கவிஞர் முத்துநிலவன், கவிஞர் தங்கம் மூர்த்தி என பலரும் இளைய கவிஞர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த புதுக்கோட்டையில், நடைபெற்ற புத்தக கண்காட்சியில்... சோலச்சி என்பவரின் விரிசல் எனும் கவிதை நூலை வெளியிட்டனர். இந்த வெளியிட்டனரில் நானும் அடக்கம் என்பதில் பெருமகிழ்ச்சி எனக்கு..
    அவரின் கவிதை நூலை நேற்று வாசித்து முடித்தேன். இந்த கவிதைப் புத்தகத்தை பதிப்பித்த மேன்மை வெளியீட்டிற்கு எனது வாழ்த்துகள். இவர்களைப் போன்றோரின் ஊக்கமே... கவிஞர்கள் வளரக் காரணம்.
   இனி கவிதைத் தொகுப்பிற்கு வருகிறேன்...



   பள்ளி ஆசிரியரான சோலச்சி சமூகம் சார்ந்த தனது பார்வைகளை கவிதைகளாக்கி இருக்கிறார். மொத்தம் 77 கவிதைகள். இவற்றில் சில கவிதைகள் பல்வேறு சிற்றிதழ்களில், கவிதை மன்றங்களில் வாசித்த கவிதைகளையும் தொகுத்திருக்கிறார். கவிதை புத்தகத்திற்கே உரிய வடிவமைப்பு நேர்த்தியாக இருக்கிறது. வெற்று இடங்களில் ஓவியங்களை வரைந்திருக்கலாம்.
   அதில் பட்டென்று மனதிற்கு பிடித்த கவிதை ஒன்று...
   குருதி
    ---
இப்போதுதான்
நடந்திருக்கும்
அந்த படுகொலை
வழியும் குருதியோடு
வாகனத்தில்...
ஆற்று நீரில்
அள்ளிய மணல்
'அவிழ்த்து விடச்சொல்' என்ற தலைப்பில் ஐல்லிக்கட்டு போராட்டத்தை எழுதியிருக்கிறார்.
அதில் எனக்கு பிடித்த வரிகள்...
'கரங்கள் யாவும்
ஒன்று சேர்ந்தால்
காவு வாங்க
வாய்ப்பேது ...’
‘துரோகிகளின்
தோலுரிப்போம்
தோலை
தவிலாக்குவோம்...’
   'நாடக மேடை’ எனும் கவிதையில்... கிராமத்தில் ரெக்கார்டு டான்ஸ் ஆடும் பெண்ணின் வலியை சொல்லியிருந்த விதம் நெகிழ்ச்சி.
   'கேட்டதை எல்லாம்...' என்ற தலைப்பில் அப்பாவைப் பற்றிய கவிதை அருமை...
அதில் ஒரு வரியை சற்று மாற்றி இருக்கலாமோ என்று தோன்றிற்று... அப்பாவிடம்
‘உம்மால் முடிந்ததையே
நாங்களும் கேட்டு வைப்போம்’ என்று எழுதியிருந்தார்.
அப்பாவினால் முடியாததைக் கூட குழந்தைகளாகிய நாம் கேட்டுவைப்போம். அவரும் பல நேரங்களில் மனவருத்தம் கொண்டிருப்பார் நாமறியாமல்.
கறுப்பு சாயம் எனும் தலைப்பிலான கவிதையில்... அரசியல் நையாண்டியைப் புகுத்தியிருக்கிறார்.
   வண்டியை ஓட்டிக்கொண்டே அலைபேசினால் வரும் ஆபத்தை... அழைப்பு என்ற தலைப்பில் எழுதியிருந்தது நறுக்கென்று இருந்தது.
காதோடு அலைபேசி
களிப்போடு
மனசு...
வேகமாய் வண்டி
உடைந்து நொறுங்கியது
வாழ்க்கை..!
   புனிதம் என்ற தலைப்பில்... கோவில் எனும் பெயரில் மூடநம்பிக்கை நடைபெறுவதை சாடியிருக்கிறார்...
   இக்கவிதைத் தொகுப்பில் ஆங்காங்கே எழுத்துப்பிழைகள் தலைதூக்குவது.. சற்று அயர்ச்சியைத் தருகிறது.
   வாழ்த்துகள் சோலச்சி... உங்களின் நான்காவது நூலான 'விரிசல்’ மேன்மை பெறட்டும்.
                            வாழ்த்துகளுடன்
                            மோ.கணேசன் 
                       பேச: 9444296929
குறிப்பு :
        மாம்பழம் விளையும் மாவட்டத்தில் கிச்சடி சம்பாவிற்கு பேர்போன ஆத்தூரில் மோகன்ராஜு, வள்ளி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக ஏப்ரல் 6, 1981-இல் பிறந்தவர் மோ.கணேசன். நான் பிறந்தது நவம்பர் 11, 1982. அவரை விட நான் வயதில் சிறியவனானாலும், தோழர் என்று அன்போடு அழைத்து, உரிமையோடு பழகுபவர். அவருடைய நட்பு முகநக நட்பல்ல. அகம் சார்ந்த அன்பு நிறைந்த நட்பு.
    எனக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள எல்லா அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் நண்பராக இருப்பவர். நிறைய அரசுப்பள்ளிகளுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்று, ’நான் அரசுப்பள்ளியில் படித்த மாணவன் என்றும், முதல் தலைமுறை பட்டதாரி என்றும், நீங்களும் படித்தால் என்னைப் போல வரமுடியும்’ என்றும் மாணவர்களை உற்சாகப்படுத்துவார். நிறைய அரசுப்பள்ளி ஆசிரியர்களின் திறன்களை பத்திரிகை உலகில் வெளிச்சமிட்டுக் காட்டியவர். 
    இலக்கிய உலகில் தனக்கென ஓர் உயரிய இடத்தை பெற்றிருக்கும் நண்பர் மோ.கணேசன் அவர்கள் மேன்மேலும் உயர நான் மனசார வாழ்த்தி மகிழ்கிறேன்.
       ஏழைக்குடும்பத்தில் பிறந்து, வறுமையை வென்று, எம்.ஏ இதழியல் முடித்து, பத்திரிகை உலகில் 17 ஆண்டுகாலமாக இருக்கிறார். அவர் விமர்சனம் செய்தது எனக்கு பெருமகிழ்ச்சி…
      நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பரே....
                     நட்பின் வழியில்
                         சோலச்சி  9788210863

வியாழன், 4 ஜனவரி, 2018

சோலச்சியின் விரிசல் நூல் குறித்து - புரட்சித்தமிழன் சத்தியசீலன்

விரிசல் - நூல் ஆய்வு புரட்சித்தமிழன் சத்தியசீலன்

நூல் ஆய்வு - புரட்சித்தமிழன் சத்தியசீலன்
*************
நூலின் பெயர்: விரிசல்
நூலின் ஆசிரியர்: கவிமதி சோலச்சி புதுக்கோட்டை
நூல் அச்சாக்கம்: கேபிட்டல் இம்பிரசன், சென்னை.
நூல் வெளியீடு: மேன்மை வெளியீடு, சென்னை.
நூலின் விலை: ரூ. 100/-
நூலாசிரியரிடம் பேச: 9788210863

இந்நூலின் ஆசிரியர் முகநூலில் தான் எனக்கு அறிமுகம். இவர் இதுவரை இரண்டு சிறுகதை நூல் இரண்டு புதுக்கவிதை நூல் என நான்கு நூல்கள் வெளியிட்டுள்ளார். அதில் சமீபத்தில் வெளியிட்டுள்ள சிறந்த சிறுகதை நூலுக்கான விருதுபெற்ற "கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்" என்னும் சிறுகதை நூலும் "விரிசல்" எனும் புதுக்கவிதை ஆகிய இந்த நூல் ஆகிய இரண்டு நூல்களை மட்டும் நான் படித்துள்ளேன்.

ஆசிரியர் பற்றி;
""""""""""""""""""""
இவர் நான் பிறந்த கவிதைக் கோட்டையாம் புதுக்கோட்டையின் மைந்தன் ஆவார். ஆதலால் இவரின் கவி தமிழோடு சிறப்பாக விளையாடியுள்ளது. இவர் எனது அருமை தோழர் கவிஞர் புதுகை தீஇர அவர்களின் சகோதரர் ஆவார். இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது மாணவர்களையும் சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும் உருவாக்குவார் என நம்புகிறேன். நான் புதுகையில் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை கிளை துவங்குவதற்காக ஒருங்கிணைப்பாளராக புதுகை சென்றபோது இரண்டு நாட்களாக என்னோடு இணைந்து ஆலோசனை வழங்கி புதுகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலக்கிய அமைப்புகள் பற்றி எடுத்துக் கூறி உதவி செய்த அருமை நண்பராவார். இவரும் நமது #தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் புதுகை மாவட்ட நிர்வாகியாக பொறுப்பேற்று செயல்படுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

நூலைப் பற்றி;
""""""""""""""""""
#விரிசல் எங்குள்ளது என்ற கேள்விக்கு வித்தியாசமான முறையில் புதுக்கவிதையில் புகுத்தியிருக்கிறார் சமூகத்தின் விரிசல்களை ஆசிரியர் சோலச்சி அவர்கள்.

அழகிய சிநேகிதமாய் தொடங்கி மந்திர சாவியால் முடித்தவிதம் அற்புதம்.

#அவிழ்த்து_விடச்சொல் எனும் கவிதையில்

"ஆணவத்தை சுமந்து கொண்டு
வடக்கு நோக்கி
போகும் போதெல்லாம்
அவமானப்பட்டே
திரும்புகிறோம்...!"

என்று ஆணவ அரசியலால் அழிந்துவரும் விவசாயம் பற்றி அழகான சொல்லால் சாடியிருக்கிறார்

விவசாயம், காதல், அரசியல் என அனைத்தையும் தமிழால் துவைத்து கவிதைகளாக தொங்க விட்டிருக்கிறார்.

#நாய்நாடு எனும் கவிதையில்

"தொண்டு செய்யும் அரசியலோ
துவண்டு போச்சுடா - இது
பணம் காய்க்கும் தொழிலாக
மாறிப் போச்சுடா"

என இன்றைய அரசியலின் நிலைபற்றி அப்பட்டமாக சொல்லி அந்த அரசியலை எப்படி #திருப்பி_அடி ப்பது என்பது பற்றி

"தேசம் உன் கையில்
தெளிவு பெறட்டும்
நீ
தொடும் மையில்"   என்றும்

விவசாயத்திற்கு ஆதாரமான மழைநீர் உற்பத்திக்கு காரணமாக இருக்கும் மரமே மழைநீர் குறைவிற்கும் தடையாக இருப்பது பற்றி #கருத்தடை_மாத்திரை எனும் கவிதையில்

"கடகடனு வளரும்
யூகலிப்ட்ஸ்சு
மழை மேகத்தின்
கருத்தடை மாத்திரை"   என்று

எதார்த்தமாய் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் இன்று சாதிகளால் சாகடிக்கப்படும் காதல்பற்றி #பிறப்பு_ஒரு_முறை என்னும் கவிதையில்

"மனம்
ஒத்துப் போனால்
வாழட்டும்...
பிறப்பு ஒருமுறை
உயிர் எடுக்க வேண்டாம்
தொடரட்டும் தலைமுறை...!"  

என்று எதார்த்த வரிகளால் மெருகேற்றியுள்ளார். அதேபோல் காதலால் விதைத்த கவிதையினை கையாண்ட விதம் பாருங்கள்

"விதண்டாவாதம் செய்யும்
உன்னைவிட்டு
விலகி நடக்கிறேன்
என் வருகையை நோக்கி காத்திருக்கிறது
எனக்கான விதை...!
இதோ விதைத்துவிட்டேன்...!"

என அற்புதமாக சொல்லியிருக்கிறார். #மிகக்_கொடியவன் எனும் கவிதையில்

"எத்தனை எத்தனையோ
அவதாரங்கள்
எடுத்தும் பயனில்லையே
இல்லாத இவர்களாலே
நாளும் தொல்லையே..."

என்று கடவுளையே சாடும் சாட்டையடி வார்த்தைகளால் சிலிர்க்கிறது இதயம். படித்து பயன் பெறுங்கள். மிக அருமையான கவிதைப் பெட்டகம் இவர் இன்னும் பல சமுதாய சாடல் கவிதைகளையும் சரித்திரம் படைக்கும் பல சிறுகதைகளையும் படைத்து வெற்றிபெற வாழ்த்துகள்.
                        நன்றி
புரட்சித்தமிழன் சத்தியசீலன்
பேச : 9994959035
            7598638802