புதன், 25 அக்டோபர், 2017

ஊரு உலகம் மெச்ச - சோலச்சி

ஊரு உலகம் மெச்ச நானும்
ஊட்டி வளர்த்த செல்ல மகள
ஒத்தையடிப் பாதையிலே தவிக்க வச்சேனே....
நான் தவிக்க வச்சேனே...

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே.....

சிட்டா திரிஞ்ச ஏம் பொண்ண
சிங்கப்பூரு மாப்பிள்ளைனு கட்டி வச்சேனே
சீர் வரிசையோடு சீதனமா
மாடிவீடும் கட்டிக் கொடுத்தேனே - இப்ப
மாடிவீடும் காலியாச்சு
மார்வாடி கடைக்கு போயிருச்சு
நகையெல்லாம் கொடுத்துப்புட்டு
அழுகையோடு தவிக்கிறா...
மாப்பிள்ளை தண்ணியிலே மிதக்கிறார்....

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே.....

காடு கரையெல்லாம் வித்துப்புட்டேன் - அந்த
காசுக்கு பைக்கும் வாங்கி தந்தேன்
காரு ஓட்டும் நெனப்புலதான்
காத்தா பறக்கிறார்...
எம்மக தினமும் பதறுறா....

சிங்கப்பூர் செண்டும் தீர்ந்துருச்சாம்
முக்கால் டவுசர் பேண்ட்ட போட்டு
நல்லா மினுக்குறார்...
எத்தன நாளைக்கு இந்தக் கூத்து
மகளோட கண்ணீர பார்த்து
நாளுபூரா நானும் ஏங்குறேன்....

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே.....

வெளிநாட்டு மோகத்திலே
வேலைக்குப் போறத நிறுத்திட்டார்
"எப்ப விசா வந்து நீங்க கிளம்பி போவீகளோ
கூலி வேலை செய்யத்தானே
கடல் கடந்து போற மச்சான்...
இங்கே நாமும் வேலை செஞ்சு நாள கடத்தலாம்"
எம்மக சொல்லி முடிக்கையிலே
சோத்துப்பானை உடைஞ்சு சிதறுது
பொண்ணப் பெத்த எம்மனசு புலம்பித் தவிக்குது.....

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே...... சிட்டா திரிஞ்ச.....

    - சோலச்சி புதுக்கோட்டை
       பேச : 9788210863

2 கருத்துகள்: