புதன், 25 அக்டோபர், 2017

ஊரு உலகம் மெச்ச - சோலச்சி

ஊரு உலகம் மெச்ச நானும்
ஊட்டி வளர்த்த செல்ல மகள
ஒத்தையடிப் பாதையிலே தவிக்க வச்சேனே....
நான் தவிக்க வச்சேனே...

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே.....

சிட்டா திரிஞ்ச ஏம் பொண்ண
சிங்கப்பூரு மாப்பிள்ளைனு கட்டி வச்சேனே
சீர் வரிசையோடு சீதனமா
மாடிவீடும் கட்டிக் கொடுத்தேனே - இப்ப
மாடிவீடும் காலியாச்சு
மார்வாடி கடைக்கு போயிருச்சு
நகையெல்லாம் கொடுத்துப்புட்டு
அழுகையோடு தவிக்கிறா...
மாப்பிள்ளை தண்ணியிலே மிதக்கிறார்....

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே.....

காடு கரையெல்லாம் வித்துப்புட்டேன் - அந்த
காசுக்கு பைக்கும் வாங்கி தந்தேன்
காரு ஓட்டும் நெனப்புலதான்
காத்தா பறக்கிறார்...
எம்மக தினமும் பதறுறா....

சிங்கப்பூர் செண்டும் தீர்ந்துருச்சாம்
முக்கால் டவுசர் பேண்ட்ட போட்டு
நல்லா மினுக்குறார்...
எத்தன நாளைக்கு இந்தக் கூத்து
மகளோட கண்ணீர பார்த்து
நாளுபூரா நானும் ஏங்குறேன்....

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே.....

வெளிநாட்டு மோகத்திலே
வேலைக்குப் போறத நிறுத்திட்டார்
"எப்ப விசா வந்து நீங்க கிளம்பி போவீகளோ
கூலி வேலை செய்யத்தானே
கடல் கடந்து போற மச்சான்...
இங்கே நாமும் வேலை செஞ்சு நாள கடத்தலாம்"
எம்மக சொல்லி முடிக்கையிலே
சோத்துப்பானை உடைஞ்சு சிதறுது
பொண்ணப் பெத்த எம்மனசு புலம்பித் தவிக்குது.....

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே...... சிட்டா திரிஞ்ச.....

    - சோலச்சி புதுக்கோட்டை
       பேச : 9788210863

புதன், 18 அக்டோபர், 2017

அம்மாடி உன் நெனப்பு - சோலச்சி



அம்மாடி உன் நெனப்பு
அடங்கலடி இன்னும் தவிப்பு
சும்மாடி நான் மொறச்சேன்
சுத்தி வருது உன் சிரிப்பு  - இப்ப
தாவணிய தான் மறந்து
சேலையத்தான் சொருவிக்கிட்ட
ஆத்தாடி கெரங்கி போறேன்
அழகு கொலுசோரம் இறங்கி வாரேன்......!

கண்ணாடி உன் உடம்பு
கண்டபடி மினுக்குதடி
என்னடி நீயும் செஞ்ச
எம்மனசு தவிக்குடி  - இப்ப
ஊரோரம் ஆத்தங்கரை
வறண்டு போயி கெடக்குதடி
வேகமாக ஓடிவாடி நீயும் - நீ
வந்தா தானே அதுல தண்ணி பாயும்.......!

விஞ்ஞான உலகமிங்கே
விறுவிறுனு போகுதடி
வீதியில வந்து பாரு
விதவிதமா தெரியுதடி - இன்னும்
அந்தக்கால நெனப்புலதான்
இங்கே நீயும் சுத்திவார
உன் முத்து விழிகள் எனக்காக திறக்கட்டும்
சித்தன்னவாசல் ஓவியம்போல நம்காதல் சிறக்கட்டும்......!
       _ சோலச்சி புதுக்கோட்டை
        பேச :9788210863

வியாழன், 12 அக்டோபர், 2017

நொண்டாங் கால் கொலுசு - சோலச்சி

உன் நொண்டாங் கால் கொலுசு
நொண்டி அடிக்குது
உன் சோத்தாங்கால் கொலுசு
சுண்டி இழுக்குது...!

எடது கண்ணு ஏற இறங்க பாக்குது
வலது கண்ணு வாஞ்சையோடு சேர்க்குது....!

அந்தி நேரம் நானும் பார்த்தேன்
ஒதுங்கி போன...
ஆசையோடு பேசும்போது
அதட்டி போன

உள்ளுக்குள்ள பூட்டிவச்சு
ஏன்டி மறைக்கிற...
உன் உள்ளமெல்லாம்  நான்தானே
ஏன்டி மறுக்குற...!

வெட்டவெளி பொட்டலப்போல்
காத்து வாங்குது...
வெட்டிடாத என் மனசு
உன்னுள் வாழுது...!

உன் சேலை மடிப்ப ரசிக்கிறேன்டி
எட்டி நடக்குற...
சோலையாட்டம் தலையிலதான்
பூவ கொட்டி வைக்கிற....!

தூங்காமலே கண்ணு முழிச்சு
கனவு காணுறேன்...
நீ தொடாமலே பறந்து போக
கலங்கி வாடுறேன்...!

சூரியனைப்போல் ஓ நெனப்பு
சுட்டுப் பொசுக்குது...
சுத்தி வந்து கொஞ்சிக்கடி
எல்லாம் தவிக்குது....!

     - சோலச்சி புதுக்கோட்டை
      பேச : 9788210863

செவ்வாய், 10 அக்டோபர், 2017

பொதிந்து கிடந்த புன்னகை - சோலச்சி

"பொதிந்து கிடந்த புன்னகை "
             
  - கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்களின் நூல் குறித்து.... சோலச்சி

  இன்றைய தமிழ் உலகில் எண்ணற்ற நூல்கள் புதிது புதிதாய் உதயமாகிக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் கவிதை நூல்களே முதலிடத்தில் உள்ளன.  ஆனால், ஏனோ கவிஞர்களை நாம் கொண்டாட தயங்குகிறோம். கவிதைகளை கொண்டாட மறுக்கிறோம்.  காலத்தை எடுத்துச் சொல்வதிலும்  மொழியை முன்னெடுத்துச் செல்வதிலும் கவிஞர்களும் கவிதைகளும் முக்கிய பங்காற்றுகின்றன. எளிய நடை,  எளிய பதம் என்பது முண்டாசு கவிஞர் பாரதியின்‌ இலக்கணம்.  அந்த வகையில் அமையப் பெற்ற அற்புதமான நூல்களில் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்களின் "பொதிந்தி கிடந்த புன்னகை " யும் ஒன்று.

  இந்நூலில் காதல் மரம் படந்து வளர்ந்து இருக்கிறது.  அதில் காய்களை விட கனிகள் நிறைந்து கிடக்கின்றன. வாழ்வின் இலக்கணம் ஆங்காங்கே குவிந்து இருக்கிறது. பொதுவுடமை பேசும் மார்க்ஸ் அழகாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். விதைகள் கொட்டி அவை வேகமாய் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. நடப்பு அரசியலை துவைத்து பல இடங்களில் காயப் போட்டிருக்கிறார். விவசாயத்தை செழிக்க வைக்க போராடுகிறார். அவர்களுக்காக கண்ணீர் சிந்துகிறார். இந்தக் காட்சிகளை எல்லாம் பொதிந்து கிடந்த புன்னகைக்குள் நிரப்பி வைத்திருக்கிறார் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள்.

  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 202 கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம் கவிஞர் மு.மேத்தா முன்னிலையில் நடைபெற்றது. அதில் விலை வாசி உயர்வைப் பற்றிய கவிதை ஒன்று....

"சூடாக டீ கேட்க
சுட்டது விலை ....?"
  
    இந்தக் கவிதையை எழுதியவர் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள்தான். முத்திரைக் கவிதைகளை படைக்க வேண்டும் என்பதைவிட புறம்போக்குகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்தக் கவியரங்கத்தில் நானும் கவிதை பாடினேன் என்பது வரலாறு.

     முதல் கவிதை இவ்வாறு நிறைவு பெறுகிறது....

"எனக்குள் எனக்காய்
நீ
எப்போது மாறிடுவாய்....?

ஒரு காதலனோ அல்லது காதலியோ தனது காதலில் உருகுவதை நம் கண் முன்னால் காட்சிபடுத்தி நம்மை அக்காதல் தேசத்திற்குள் அழைத்துச் செல்கிறார்.

  எதார்த்த உலகில் மதத்தை சாதியை எவ்வாறு கணிக்கிறார்கள் என்பதை இப்படி சொல்கிறார்...

"பெயர்
தெரிந்த நொடியில்
முடிவாகிப் போகிறது
மதம் எதுவென...."

அப்துல்லா என்றால் இசுலாமியர்,  அலெக்ஸ் என்றால் கிறித்துவர், அடைக்கலம் என்றால் இந்து... பிறகு ஊர் தெரு பெயர் கேட்டால் எல்லாம் தெரிந்து விடும். மதமும் சாதியும் மனிதனை கட்டிக்கொள்ளவில்லை. மனிதன்தான் கட்டிக் கொண்டு அலைகிறான்.

  விதை என்ற தலைப்பில் ஒரு அழகான கவிதை ...

"இது
வேரின் வீரியம் அல்ல
விதையின் வீரியம்....!

விதைகள்
உறங்குவதில்லை
உயித்தெழும்...."

   என்று நம்மை தட்டி எழுப்புகிறார். வாய்ப்புகள் கிடைக்கவில்லை,  சாதிக்க வழி தெரியவில்லை என்பவர்களுக்கு கவிஞரின் விதை என்ற கவிதை ஒரு பாடமாக அமைகிறது. பொதிந்து கிடந்த புன்னகை என்ற தலைப்பில் உள்ள கவிதை கவிஞருக்கும் பூவுக்குமான உரையாடல்.  கவிஞர் பூக்களிடமும் பேசும் வல்லமை பெற்றவர் என்பதை நம்மால் உணர முடிகிறது.

  துண்டு என்கிற கவிதையில் இத்தேசத்தில் துண்டாடப்பட்டு நசுக்கப்பட்டு கிடக்கும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கிறது....

"காலம் கடந்து
தோளில் ஏற்றிய
துண்டை சுமந்து
கௌரவ மிடுக்காய்
சுகமாய் நட...
சுத்தமாகட்டும் வீதிகள்...!"

    என்று அந்த மக்களுக்காக குரல் கொடுப்பதிலிருந்து தாம் ஒரு சமூகப் போராளி என்பதை நிலை நிறுத்துகிறார். நம் சக தோழர்களான திருநங்கைகள் பற்றி கூறும்போது ....

"பேச்சிலும்
எழுத்திலும்
பிழைகள் இருக்கலாம்
பிறப்பிலுமா....????

  என்று கண்ணீர் வடிக்கிறார் கவிஞர். பிள்ளைகளின் பெரும் கடமை பெற்றோர்களை கவனித்துக் கொள்வதுதான். நவீனம் என்று பிதற்றித் திரியும் இந்த உலகில் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுவதையே தலையாய நோக்கமாக கருதுகிறார்கள். முதியோர் இல்லமும் இல்லையென்றால் அவர்கள் பாடு பெரும்பாடுதான். அதனால்தான் முதியோர் இல்லங்கள் வாழ்க என்று கவிஞர் ஒருவர் பாடினார்.

"என் இல்லத்தில்
எவரெவருக்கோ
இலை போட்டு
உணவளித்து மகிழ்ந்த
இந்த கை....

கை நீட்டுகிறது
ஆதரவற்றவளாய்
முதியோர் இல்லத்தில்...."

என்று "இந்த கை " என்ற தலைப்பில் ஒரு தாய் சொல்வது போல் படைத்திருக்கிறார். ஒருநிமிடம் இறந்து போன என் தாய்க்காக அழுதுவிட்டுத்தான் அடுத்த கவிதையே வாசிக்கச் சென்றேன் கனத்த இதயத்தோடு.....

நான் சாகும் போது
பக்கத்தில் இரு.... என்கிற கவிதைகளிலெல்லாம் நம்மை ஏதோ இனம்புரியாத தாக்கத்தை நிகழ்த்திவிட்டுச் செல்கிறார் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள். ஒவ்வொரு பக்கமும் நம் பக்கம் அமர்ந்து உறவாடும்படியான அற்புதமான கவிதைகளை படைத்து இத்தேசத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கிட முயலும் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்களை மனசார வாழ்த்துகிறேன். 

  நூலினை மேன்மை பதிப்பகம் மணி அவர்கள் மிகச் சிறப்பாக கையாண்டு வடிவமைத்திருக்கிறார். பதிப்பகத்தாருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்நூலுக்கு தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள், தமிழ் இந்து நாளிதழ் முதன்மை இணையாசிரியர் தோழர் மு.முருகேஷ், சிந்தனைக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், தோழர் மு.அன்பரசு அவர்கள் என மிகப்பெரிய ஆளுமைகள் அணிந்துரை வழங்கி அழகு சேர்த்திருக்கிறார்கள். கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள் இன்னும் நூல்கள் பல வெளியிட்டு தமிழ்த்தாயின் செல்லப் பிள்ளையாக வலம் வர வாழ்த்தி மகிழ்கின்றென்.

விலை ரூபாய் 80/-
பதிப்பாசிரியர் : 044 - 28472058

நூலாசிரியர் : 9443531981

                        வாழ்த்துகளுடன்
                      அன்பு பண்பு பாசம்
                         நட்பின் வழியில்
                 சோலச்சி புதுக்கோட்டை
 

 

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

முத்தன் பள்ளம் நாவல்

          "முத்தன் பள்ளம் "

    இரண்டாயிரம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் மாணவராக சேருகிறேன்.  கவிதை எழுதுவது,  பாடுவது பேசுவது என்ற எனது திறன்கள் வகுப்பறையில் நடந்தேறிக்கொண்டு இருக்கிறது.  எல்லோரும் என்னைப் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.   என்னை வியந்து பார்த்தபடி ஒரு குள்ளமான பையன் என்னருகே வருகிறான். நானோ  ஒட்டடைக்குச்சிக்கு சட்டை போட்டவிட்டால் எப்படி இருக்கிறேன். நானும் அவனை நெருங்குகிறேன். எங்கள் மலர ஆரம்பிக்கிறது. தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறோம்.

    எப்படி எழுதுவது பேசுவது என்று என்னிடம் கேட்கும் அவனுக்கு ஆலோசனைகளை வழங்குகிறேன். அவனும் ஆர்வத்தோடு கேட்டுக் கொள்கிறான். இலக்கியம்தான் எங்களை சேர்த்து வைத்தது என்றால் மிகையில்லை.  நானும் அவனும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கும் காலத்தில்  இருவரும் சேர்ந்தே எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறோம்.  நாடகங்களுக்கு கதை திரைக்கதை வசனம் இயக்கம் என அனைத்தும் நானே என்றாலும் கதாநாயகன் வேடம் மட்டும் அவன்தான்.  ஏனெனில் கதாநாயகனாக தன்னை எப்போதுமே காட்டிக்கொள்ள அவன் ஆசைப்படுவான். அவனுக்கு எதிர் கதாபாத்திரமாக நான். பல நேரங்களில் நாங்கள் இருவர் மட்டுமே நடிகர்களாக நடித்து பேர் பெற்றவையும் உண்டு. 

  எங்களை இரட்டையர்கள் என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள்.  அதில் சிலர் ப்ரியங்களுடன் இப்படியும் அழைப்பார்கள்.  "அரபி " இது சிலர் வைத்த செல்லப் பெயர்.  அது என்ன அரபி என்று எங்கள் முதல்வர் திரு.ஞானசுந்தரத்தரசு அவர்கள் பாரதி விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது மேடையில் கேட்டே விட்டார்.   "அருவை, ரம்பம், பிளேடு " என்று கீழிருந்த நண்பர் ஒருவர் சொல்ல அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியிருந்தது.

   நகைச்சுவையாக நிறைய நிகழ்வுகள் நடந்தேறினாலும் நாங்கள் கரகாட்டக்காரன் படத்தில் வரும் மாரியம்மா மாரியம்மா பாட்டுக்கு ஆடியதை எங்கள் சக நண்பர்கள் யாரும் எப்போதும் மறக்க மாட்டார்கள்.  மேடையில் ஆடி முடித்ததும் ,இப்போது நூறு மீட்டர் ஓட்டப்பந்தையம் நடைபெற்றது.  மற்ற போட்டிகள் அடுத்தடுத்து நிகழும் என்று எங்கள் உயர்கல்வி ஆசிரியர் திருமிகு.பிரபாவதி அவர்கள் சொல்ல அரங்கில் சிரிப்பொலி அடங்க அதிக நேரம் பிடித்தது. இருந்தபோதும் எங்களுக்குத்தான் இரண்டாம் பரிசு கிடைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் மொத்த நடனமே இரண்டு தான்.

  பயிற்சி காலத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்களைக் கொண்டு "சித்திரங்கள் பேசுகின்றன" என்ற கைப்பிரதி நூலை நான் வெளியிட அவனும் அதேபோல கைப்பிரதி நூல் ஒன்றை வெளியிட எங்கள் முதல் நூல் அதுதான்.

   இன்று நான் மூன்று நூல்களையும் அவன் நான்கு நூல்கள் எழுதி ஐந்தாவதாக "முத்தன் பள்ளம் " என்கிற நாவலையும் எழுதி புதிய சகாப்தம் படைத்திருக்கின்றான்.  சு.இராஜமாணிக்கம் என்று எழுதிக் கொண்டு இருந்தவனை அண்டனூர் சுரா என்று பெயர் திருத்தம் செய்தேன். அவன் அப்படியே தற்போதும் தொடர்கிறான். என் அருமை மாப்பிள்ளையாகவும் இருக்கிறான்.
   
   முத்தன் பள்ளம் :

  நவீன உலகத்தில் நவீனத்தைக் கொண்டு படைத்த நாவல் "முத்தன் பள்ளம் ". சமகால அரசியலை கந்துவட்டிக்காரன் மூலம் பதாகைகளைப் பயன்படுத்தி முதல் பகுதி சிறப்பாக நகர்கிறது என்பதைவிட நம்மோடு பயணிக்கிறது. இரண்டாம் பகுதி புதுக்கோட்டை மன்னர்கள் மற்றும் ஊர்கள் பற்றிய பல தகவல்களை தரும் வரலாற்று நூலாக பயணிக்கிறது.  அரசர்களுக்கு உறுதுணையாக இருந்த வம்சம் ஒன்று இன்று அடிப்படை வசதிகூட இல்லாத அவலநிலையில் இருப்பதை சுட்டிக்காட்டுவதே இந்த முத்தன் பள்ளம். இதில் புனைவுகள் என்று முத்தன்பள்ளம் பற்றிய நிகழ்வுகள் ஒன்றிரண்டு இருந்தாலும் மற்றவை அனைத்தும் உண்மையே.

  உள்ளதை உள்ளபடி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. நாவலுக்கு அணிந்துரை வணக்கத்திற்குரிய எழுத்தாளர் நாஞ்சில்நாடன் என்பது கூடுதல் சிறப்பு. மேன்மை பதிப்பகம் நூலை மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறது.  பாராட்டுக்களை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்.

    முத்தன் பள்ளம் இரண்டு கதாநாயகன்களைக் கொண்டது. ஒருவர் கந்துவட்டிக்காரன் மற்றொருவர் பாட்டன். இரண்டும் சிறப்பான கதாபாத்திரங்கள். இதில் கவனிக்கப்பட வேண்டியது இரண்டு பகுதியுமே இரண்டு குறுநாவல்கள்.  இரண்டையும் சிறப்பாக செய்திருக்கும் என் அருமை மாப்பிள்ளை அண்டனூர் சுரா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

   முத்தன் பள்ளத்தில் வரும் கதாநாயகர்கள் பாட்டன் - முத்தாயி இவர்களது காதலை மையப்படுத்தி நாவல் படைக்கப்பட்டிருந்தால் மிகச்சிறந்த நாவலாக வந்திருக்கும். வரலாற்று நிகழ்வுகளை இதில் புகுத்தியுள்ளார். வரலாற்று நிகழ்வு என்பது அரிதல்ல... இணையத்திற்குள் தேடினால் வேண்டும் வரை எடுத்துக்கொள்ள முடியும். இந்நாவலில் பலரும் அறியாத வரலாற்று நிகழ்வு என்று எதுவும் கிடையாது. இருந்தாலும் கையாண்ட விதம் மிகச் சிறப்பு.

  இதன் நோக்கம் சமகாலத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஊருக்கு வசதியை செய்து கொடுப்பதுதான்.  அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் எண்ணற்ற முத்தன் பள்ளங்கள் இருக்கும் இத்தேசத்தில்தான் டிஜிட்டல் இந்தியா விளம்பரம் நாளும் பல்லைக்காட்டி இளித்துக்கொண்டு இருக்கிறது.........

   நாவல் முயற்சிக்கு பாராட்டுக்கள் மாப்ள. மேலும் நிறைய எழுத வாழ்த்துகிறேன்....

வெள்ளி, 6 அக்டோபர், 2017

எங்கடா இன்னும் ...... - சோலச்சி

           
காதலன் :

எங்கடா இன்னும் அவள காணல
அவளுக்கு மட்டுமா பொழுது விடியல
அவதான்டா என்னோட சம்சாரம்
அவ இல்லாம என்னுள் பாயுது மின்சாரம் ....

நண்பன் :

கவலைப்படாதே நண்பா
பொழுது விடியுது
காதலுக்கு அறிகுறியா கதவு திறக்குது
சேவல் கூவுது அதோட
பெட்டை சேரப் போகுது...




காதலன் :

இண்டர்நெட்டில் நாளுபூரா
மூழ்கி இருக்குறா
இந்தியாவ விட்டு அவ
எங்கோ பறக்குறா....
அவ மனசு திறக்கத்தானே
முயற்சி பண்ணுறேன்
மனக்கதவ மூடி போறதால
மனசு உடைஞ்சு போகுறேன்....

நண்பன் :

பொண்ணுகனா இப்படித்தான்
போகப் போக தெரிஞ்சுக்க
சொன்னவுடன் ஏத்துக்க காதல் என்ன
தீக்குச்சியா புருஞ்சுக்க....

நண்பன் :

காதல் வந்தா எரிமலையும்
குளிர்காய இடம் கொடுக்கும்டா
கை கூடவில்லையினா
கடுகும் மலையா தெரியும்டா....

காதலன் :

படுக்கையறையில் விளக்கணச்சு
முழிச்சு இருக்குறேன்
பகல்பொழுத பக்கத்தில் வச்சு
பார்த்து ரசிக்கிறேன்....
மின்னல் போல சில நேரம்
வந்து போகுறா
என் மேனிகுளிர வாய் திறந்து
சொல்ல மறுக்குறா....

காதலன் :

வாட்ச்அப் பேஸ்புக்கில்
கணக்கு தொடங்கினேன்
டுவிட்டர் மூலம் கூட
தூது விட்டேன்...
காதல் வானில் பறந்து போக
கனவும் கண்டேன்
அவ மூச்சு என்னில் படாமலே
முகத்த மூடி போகுறா....

நண்பன் :

வானத்துல வானவில்லா நோட்டமிடுவா
உன் வாசலுல சீக்கிரமா கோலம் போடுவா
அவ பேசாம போவதிலும்
காதல் இருக்குது
உன்ன சுத்தவிட்டு ரசிக்கிறாடா
எதுக்கு உனக்கு மூச்சு வாங்குது....

        - சோலச்சி புதுக்கோட்டை
          பேச : 9788210863