வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தூங்கி கெடக்குடா தேசம் - சோலச்சி

எனக்கென்ன.... எனக்கென்ன.....

தூங்கி கெடக்குடா தேசம்
தூக்கி நிறுத்துடா
நலிஞ்சு போச்சுடா நாடு
நாசமாச்சுடா.....

எனக்கென்ன எனக்கென்ன
என்றிருந்தால்
எல்லாம் இழப்பாய் சம்மதமா....
உனக்குள்ளும் இருக்கு
உறங்காமல் எழுப்பு ஆவேசமா.....

சகிப்புத்தன்மையும் இல்லாமல் போச்சு
சாதிச் சண்டையும் குறையல....

திங்கிற உணவுல தீட்டா - என்
தேசம் என்னடா கள்ள நோட்டா....!

மாட்டுக்கறி தின்னா பொறுக்கல
மனுசன வெட்டி சாய்க்கிறான் தெருவுல...

ஆதிக்க இனமே ஆணவம் எதுக்கு
அன்போடு வாழ பூமி இருக்கு....!

காசுக்கு மதிப்பும் இல்லாமல் போச்சு
கள்ள பதுக்கல்காரன் இன்னும் சிக்கல....

வெறும் பணத்த அவனுக சுருட்டல - பெரும்
நகையா சொத்தா பதுக்கிட்டான்...!

அரசியல் சட்டம் பூட்டியே இருக்கு
அன்னாடம் காச்சி தெருவுல கெடக்கு....

ஆட்சியாளரே அடித்தட்டு வாழ்க்கை ஒளிரல
அனைவரும் வாழ வழியா தெரியல.......!!!!

     -  சோலச்சி புதுக்கோட்டை
     பேச :9788210863

மனம் சுடும் தோட்டாக்கள் - கவிஞர் மு.கீதா

எனது பார்வையில் ......

தாயின் நூல் குறித்து மகன்....

   "மனம் சுடும் தோட்டாக்கள் "

     கவிஞர்கள், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் இன்றைய சூழலில் தனக்கான முத்திரையை பதித்து வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த  எழுச்சிக்கவிஞர் மு.கீதா அவர்கள். எதையாவது எழுதி குவித்து விட வேண்டும் என்று எண்ணாமல் எதை எழுதுவது என்று தீர்மானம் செய்து அது இச்சமூகத்திற்கு பயன்படுமா என்று மனதுக்குள் முடிவு செய்து அதையே "மனம் சுடும் தோட்டாக்களாக " படுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

     பெண்களுக்கான போராளியாகவே வாழ்ந்து வருகிறார் தனது கவிதையிலும். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றிருக்கும் இன்றைய சூழலில் இவர் காலத்தின் ஒளி விளக்கு. இவரது கவிதை நிச்சயமாக இவ்வுலகிற்கு மிகப்பெரிய வெளிச்சத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.  பெண்ணியம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தையும் அலசி ஆராய்ந்திருக்கிறார்.

    அமெரிக்காவில் வசித்துவரும் சகோதரி வி.கிரேஸ் பிரதிபா அவர்கள் மிகச் சரியான முன்னுரையை எழுதியிருக்குறார். காகிதம் பதிப்பகம் அமரர் மனோபாரதி மிக அழகாக நூலினை தயார்செய்து இருக்கிறார்.

    "நட்டநடு இரவு
     பன்னிரெண்டு மணி
      உடல் நிறைய நகைகளுடன்
     ஒற்றைப் பெண் ஊர்வலமாய்......,,,,"

    - என்று மாரியம்மன் மூலம் ஆணாதிக்க வர்க்கத்திற்கு சவுக்கடி கொடுத்திருக்கும் இவரது துணிச்சலை மிகவும் ரசித்து மனசார பாராட்டி மகிழ்கின்றேன்.

    விழி தூவிய விதைகள்,  ஒரு கோப்பை மனிதம் இவரது முந்தைய நூல்கள் என்றாலும் இந்த நூலில் மாறுபட்டு காட்சியளிக்கிறார். இவரது கவிதையின் வளர்ச்சியை உணர முடிகிறது.  பள்ளிக்கூடத்து ஆசிரியராக எத்தனையோ பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.  அவர்கள் யாவரும் புரட்சியாளராக போராளியாக சமூக சிந்தனை உடையவர்களாக இருக்கின்றார்களா.....? இல்லையே... ஆனால் இவர் தனித்துவமானவர். அதனால்தான் அனைத்துமுகமாகவும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்.

    "மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா...." என்ற வரிகளுக்கு பொருள் நிறைந்தவராய் இருக்கும் கவிஞரை மேலும் மனசார பாராட்டி மகிழ்கின்றேன்.

    "யானையை மிரட்டுபவள்
கொசுவிற்கு பயந்தலறுவதை
ரசிக்கும் படுக்கையறை......"

   என்று சின்னக் கண்ணம்மாவை எதிரே தோன்ற வைத்து பெண் குழந்தைகளுக்கு மகுடம் சூட்டி மகிழ்கிறார். வக்கிரப்புத்தி உடைய ஆண்களையும் மனம் மாற்றம் செய்ய முயற்சிக்கிறார். ஒரு படைப்பு வெளி வருகிறது என்று சொன்னால் அது ஏதாவது ஒரு மாற்றத்தை உண்டுபண்ண வேண்டும்.  இவரின் இந்த நூல் நிச்சயமாக அவர் எதிர்பார்க்கும் ஒருமாற்றத்திற்கான வழியைச் செய்யும்.

   காலந்தொட்டு டீக்கடைகளில்தான் அரசியல் பேச்சுகள் ஊர்க் கதைகள் எல்லாம் அரங்கேறும். இந்த நிகழ்வினை நயமாக நக்கலடித்து இவ்வாறு பேசுகிறார் கவிஞர் ....

   " உலகைச் சுற்றி பார்க்க ஆசையா
வா
டீக்கடை வைக்கலாம் ......."

   என்கிறார்.

    அரசியல்,  சாதி, பெண்ணியம், குழந்தைகள் என கவிதைக் களஞ்சியம் இதில் குவிந்து கிடக்கின்றன.  வாசிக்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவரது இல்லத்திலும் இருக்க வேண்டிய இந்த தோட்டாக்களை வாங்கி வைத்து இலக்கிய இன்பம் பெற வேண்டிய அற்புதமான நூல்....

76 பக்கங்கள் கொண்ட    மனம் சுடும் தோட்டாக்கள் நிச்சயமாக மனதைச் சுடும்...

தொடர்புக்கு:
கவிஞர் மு.கீதா
(தேவதா தமிழ்)
பேச : 9659247363

                       மகிழ்ச்சியுடன்
                   அன்பு பண்பு பாசம்
                       நட்பின் வழியில்
      
                   சோலச்சி புதுக்கோட்டை

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

அறுந்த பல்லி..... - சோலச்சி

அறுந்த பல்லி.......

சுவரில் பல்லியை கண்டான் ஒருவன்.....
ஊரும் உயிரி வால் எதற்கு..?

வாளால் வாலை வெட்டினான்
துடித்து மடிந்த வாலால் துடித்தது....

துடிக்கும் வாலைக் கண்டு
துள்ளி மகிழ்ந்தான் ....

நாட்கள் கடந்தன ;
வால் அறுந்த பல்லி மீண்டும்
சந்தித்தது புதிய வாலோடு....
கையொன்றில்லை அப்போது அவனுக்கு ....
விபத்தொன்றில் விழுந்துவிட்டது ....!!!

எதுவும் பேசாமல் மௌனமானான் ;
பேசத் தொடங்கியது பல்லி.....

மனிதா... கடலைப் போன்றது உன் உள்ளம்
அதிசயமும் நீதான் ; அற்பமும் நிதான் ;
எதையும் எண்ணிவிடாதே அற்பமாய்....

இயற்கையின் நியதி அறிந்து
வாழ்வு தொடங்கு
ஊர்ந்து சென்றது உரையாற்றிவிட்டு.....

     - சோலச்சி புதுக்கோட்டை
     பேச : 9788210863

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

எட்டி எட்டி மாங்காய......... - சோலச்சி

                பாடல்  

எட்டி எட்டி மாங்காய பறிக்கிற
எத்தன மாசமுனு கேட்டா ஏன்டி மொறைக்கிற
மாராப்பு முள்ளுலதான் மாட்டுது
மடிப்பு சேலை ஆசையத்தான் கூட்டுது.....

நீளமான கூந்தலுக்கு என்னடி போட்ட
வாசம் ஆள தூக்குதடி நித்தமும் காட்டே
நம்ம ஊரு தார்ச்சாலை நாலுமாசம் கூட தங்கல
உன் கண்ணுல மை பூசி வருசமாச்சே
நிறம் இன்னும் நீங்கல
உனக்காக நானும்தானே பாட்டு பாடுறேன்
அதில் உள்ளூரு அரசியல சேத்து பாடுறேன்.....

நம்மோலட காசுலதான் பொது கட்டடம் கட்டுறான்
அவங்க அப்பன் ஆத்தா காசுபோல அவன் பேர ஒட்டுறான்
சுட்டிக்காட்ட நானிருக்கேன் சின்னப்புள்ள
தட்டிக் கேட்க ஆளு சேர்ப்போம் வாடி புள்ள
இப்ப உன் நெத்தியில குங்குமத்தை வைக்கிறேன்
சீக்கிரம் கிழிஞ்சுபோன அரசியல தைக்கிறேன்.......

மறைமுகமா விவசாயத்தை அழிக்கத் துடிக்கிறான்
மண்ணைத் தோண்டி நம்மலத்தான் போட்டு புதைக்கிறான்
மரம் மலை பொந்துகளில் தேனைக் காணோம்
இயற்கையான வாழ்க்கையத்தான் மறந்து போனோம்
அடுத்தவன எப்போதும் கெடுக்க எண்ணாதே
அநியாயம் கண்டால் எனக்கென்னனு ஒதுங்கி போகாதே......
             - சோலச்சி புதுக்கோட்டை
              பேச : 9788210863

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

குழி விழுந்த சாலையைப் போல.....- சோலச்சி

                        பாடல்
குழி விழுந்த சாலையைப் போல
குலுங்கி குலுங்கி சிரிக்கிற
இடி விழுந்த மரத்தைப் போல
என்னை ஏன்டி ஆக்குற.....


அர்த்த ராத்திரி நேரத்துல
அடிச்சு என்ன எழுப்புற
அத்த மக உன் நெனப்ப
ஆயுசு பூரா கூட்டுற......


என்னை வாழ வச்சவளே
ஏன்டி ஒதுங்கி போகுற
என் மனசு பூரா நீதானே
அத சொன்னா எதுக்கு மறுக்குற
காலம் பார்த்து பழகல
ஏனோ காதலிக்க தெரியல - நான்
எப்படிச் சொல்லுவேன்
யார்கிட்ட எடுத்துச் சொல்லுவேன்
தனியா தனியா புலம்பி வாடுறேன்......


அப்படி அழகா சீவ சொன்னவளே
இப்படி மொறச்சுப் போகுற
என்னுள் கலப்பு இல்ல புள்ள
அத ஏனோ நீயும் நம்பல
காயம்பட்டு தவிக்கிறேன்
மருந்தாக உன்னை நெனைக்கிறேன்  - இனி
எதையும் எப்போ வெல்லுவேன்
துணையா துணையா உன்னைத் தேடுறேன்......


வானில் நீந்தும் வெண்ணிலவே
உன்னை ஒதுக்க முடியுமா
என்னுள் நீந்தும் பெண்ணிலவே
உன்னை மறந்து உசுரு நிலைக்குமா
காலம் பூரா நீதானே
என்னைக் கண்டுக்கடி பொன்மானே - நான்
உன்னுள் வாழனும்
இல்ல உன் கூர்விழிகள் குத்தி சாகனும்
தினம் தினம் நெனச்சு ஏங்குறேன்........

              - கவிமதி சோலச்சி புதுக்கோட்டை
               பேச :9788210863

புதன், 13 செப்டம்பர், 2017

அயோத்திதாச பண்டிதர் - சோலச்சி

        அயோத்திதாச பண்டிதர்.....

                        பாடல்

அடக்கு முறையை உடைத்திடடா
ஆணவக் கொலைகள் தடுத்திடடா
தாழ்த்தப்பட்டவர் என்று சொன்னால்
எரிதழலாய் பொங்கி எழுந்திடடா........

ஆயிரம் விளக்கில் உதித்தவரு
அஞ்சாது நிமிர்ந்து வென்றவரு
நீயும் நானும் தலைநிமிர - அன்றே
வேங்கையாய் வீறிட்டு எழுந்தவரு
இவர் சித்த மருத்துவர் சமூகப்போராளி
அயோத்திதாச பண்டிதர் - நம் தாத்தா
அயோத்திதாச பண்டிதர்....

நீலகிரியிலும் வாழ்ந்தவரு
நீங்காது துயர் கொண்டு கொதித்தவரு
மலைவாழ் மக்களை ஒன்றிணைத்து
அத்வைதானந்த சபையை நிறுவினாரு
அத்தனை மதத்தையும்  அடியோடு வெறுத்தவர்
பௌத்த மதமே சிறப்பென்றார் - நம் தாத்தா
அயோத்திதாச பண்டிதர்.....

ஆதியில் மனிதரில் சாதியில்லை
இடையில் ஆரியர் வந்ததால் யாவும் தொல்லை
நசுக்கப்பட்டு கிடப்பது பட்டியல் இனமடா
சாதிய இந்துக்களே அவாளின் அடியாளா
சத்தியமா  உம் தலையில் வெறும் மண்ணா
திருப்பி அடிக்க திமறி எழுந்தா நாடு தாங்காது
தகாத புத்தியை தகர்த்து எரிந்து
கரம்கொடு பூசல் தங்காது......

     - சோலச்சி புதுக்கோட்டை
      பேச : 9788210863

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

கவிஞர் புதுகை தீ.இர நூல் வெளியீட்டு விழா

         இன்று (10.09.2017) ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு  சென்னை ஆவடி முத்தமிழ் மன்றத்தில் கவிஞர் புதுகை தீ.இர அவர்களின் " வியர்வையின் முகவரி " கவிதை நூல் வெளியிடப்பட்டது. நிகழ்வில் முனைவர் எழில் சோம.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் முனைவர் சு.மகாதேவன் அவர்களும்,  முனைவர் திரிபுரசூடாமணி அவர்களும் வெளியிட இயக்கி தொழிலகத்தின் உயர் அலுவலர் கே.சுப்பிரமணி IOFS அவர்களும், பாவையர் மலர் ஆசிரியர் ம.வான்மதி அவர்களும் பெற்றுக் கொண்டனர். விழாவில் தமிழர் எழுச்சிக்குரல் ஆசிரியர் பத்மநாபன், கவிஞர் கிளாக்காடி முனுசாமி, புலவர் முரளி, கவிஞர் ஜார்ஜ் மணியண்ணன், புலவர் சாமி சுரேஷ்,  புலவர் வள்ளுவன்,  கவிஞர் ஞானமூர்த்தி, கவிஞர் தங்க.ஆரோக்கியதாசன் மற்றும் முத்தமிழ் மன்ற நிர்வாகிகளும் இலக்கிய ஆர்வலர்களும் சோலச்சியாகிய நானும்  கலந்து கொண்ட நிகழ்வு மிகச் சிறப்பாக அமைந்தது. விழாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.

    கவிஞர் ஞானமூர்த்தி அவர்களும் முனைவர் திரிபுரசூடாமணி அவர்களும் கவிஞர் ம.வான்மதி பாவையர் மலர் இதழாசிரியர் அவர்களும் நூல் குறித்து விமர்சனம் செய்தனர்.

சில கவிதைகள் குறித்து ம.வான்மதி அவர்கள் பேசும் போதே கண் கலங்கினார்.

"அஞ்சுக்கும் பத்துக்கும்
நீ அலஞ்ச - அந்த
ஐம்பது ரூபா கடனுக்கு
ஓடி ஒளிஞ்ச...."

      -என்ற மலக்கொழுந்து என்ற தலைப்பில் உள்ள கவிதைதான் அவரை கண்கலங்கச் செய்தது.

கவிஞர் புதுகை தீ.இர அவர்கள் தனது ஏற்புரையில் தனக்கு உதவிய தோழர்கள் பலரையும் நினைவு கூர்ந்து நன்றி பாராட்டிய விதம் அனைவரையும் நெகிழச் செய்தது.

நூல் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து "ஆசிரியரும் ஆதவனும் " என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றது. கவியரங்கில் இருபது கவிஞர்கள் கவிதை பாடினார்கள்.

  நிறைவாக புலவர் எழிழ்.சோம.பொன்னுசாமி அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

வியாழன், 7 செப்டம்பர், 2017

மாட்டுக்கறியோ...... - சோலச்சி



மாட்டுக்கறியோ மரக்கறியோ
அவனவன் விருப்பம்
அடுத்தவன் உணர்வுல வேட்டு வச்சா
புரட்சிதான்டா வெடிக்கும்...


மனித இரத்தமா மாட்டு மூத்திரமா
எதுடா இங்கே புனிதம்
மனிதனை வெட்டி சாய்க்கிறான்
மதத்தை தூக்கி வைக்கிறான்
செத்துப்போனதே மனிதம்....


சர்வாதிகார நாடாப் போச்சு
சாப்பிடக் கூட வரியும் விதிச்சாச்சு
சத்தியமா சொல்லுறேன்
புருசன் பொண்டாட்டி உறவுக்கு கூட
வரியும் விதிப்பான்
புள்ள வயசுக்கு வந்தாலும்
வரிதான் கேட்பான்..........


தமிழ் கன்னடம் உருது இந்தி
எப்படி மாறும் ஒரே இனமா
இந்துக்குள்ளே அடிமையாக்குறான்
இஸ்லாமை வேரறுக்குறான்
காவியால் ஆகுது ரணகளமா....


ஆணவப் போக்கு ஓங்கிருச்சு
அத அடிச்சு நொறுக்கும் காலம் வந்தாச்சு
உள்ளபடி சொல்லுறேன்
நாம மனுசனாக ஒன்னா இருந்தா
மசுர புடுங்க முடியுமா
திருப்பி அடிக்க தெருவுக்கு வந்தா
அவன்தான் தொடர முடியுமா...

   - சோலச்சி புதுக்கோட்டை

சனி, 2 செப்டம்பர், 2017

சாவே இல்ல........ - சோலச்சி

                சாவே இல்ல.......!!!!!

என்னைக் காக்கப் பிறந்தவளே
உன் நோக்கம் குலைவதென்னடி
நோகி தவிக்கிறேனடி..! - உன் மனம்
போகியாவது எப்ப.......டி...???

தொட்டுத் தழுவ கேட்கல - மனம்
வெட்டுண்டு தாங்க முடியல....!!!

துட்டுக்காய் கட்டி என்னடி கண்ட
துக்கம் தொடர்வதிலா இன்பம் கொண்ட...!!!

பணம் காய்க்கும் மரமுனா நெனச்ச
பகல் வேசமாய் நடிச்ச....

என்ன நீ சாதிச்ச புரியல
புரியாத மயக்கம் உன்னுள் தெளியல....!!!!

நீயாவது மகிழு அதுவும் இல்ல
அதுக்கு தடை நானா புள்ள...!!!

உனக்குப் பிடிக்குமுனே இருந்தேன்
நான் துடிக்க யாவும் இழந்தேன்....

வருசம் கடந்து போகுதடி
வாய் ருசிக்க நிகழ்ந்தது இல்ல....

எனக்கென்ன போக்குலதான்
அடுப்பு புகையுது
வாந்தி வருதானு வசையும் பொழியுது...!!!!

காடுகரைய வித்து படிக்க வச்சேன்
உன்னில் கிடந்த நகையவுமே
நீ படிக்க வித்தேன்....

உன்னாலும் முடியுமுனு
தைரியம் சொன்னேன்
உன்னதமாய் வாழ நின்னேன்....!!!!

உறவுகளுக்காய் ஒப்பந்தமும் போட்ட
உயிர் பிறக்க பத்திரத்தில்
எழுதியும் கேட்ட ....

அன்பு மோகத்தாலே உன்னை அடைஞ்சேன்
அழகு மேனி மோகம் கொண்டும்
வேதனையில் நனஞ்சேன்....!!!

பணமே வாழ்வு எனில் உசுரு இருக்காது
குணம் இல்லேனா -ஒரு
மசுரும் தங்காது.....

புரிதல் இல்லேனா புண்ணுதானடி
புன்னகை மலர உணர்தல் வேணுன்டி....

இந்த வயசில் வாழலனா கண்மணி
இனி எப்ப வாழப் போற கவனி....

தான் என்பதையும் விட்டுவிடு
தரமான கோபத்தையே கையில் எடு.....

வீணாக உன் வாழ்வு என்னாலே
தானாக போனதுனு வாடுறேன்....

சின்ன வயசு உன்ன நானும்
கட்டிக்கிட்டேன்...! - அதில் என்
பாவத்தை தேடிக்கிட்டேன்....

பாவத்துக்கு மன்னிப்பு கிடையாது - என்
பாவமும் மண்ணில் மறையாது ......

குழந்தையான உனக்கு
குழந்தையும் தந்தேன்
குவலயம் ஏற்க
குற்றமும் செய்தேன் ...! - நீ
நெனச்ச வாழ்வு என்னில் இல்ல
அதனால வாடுறேன் மெல்ல....

விட்டுப்போன
வாழ்க்கையை வாழ்ந்து விடு
வேணும்னா என் உயிர் தவிர
எடுத்துக்கொள்ளு.....

இந்த உசுருக்கு உலகத்தில்
வேலையிருக்கு..!!? - என்
எழுத்தாலே உலகு விழிக்க
வழியும் இருக்கு.....

உண்மையான அன்புக்குத்தான்
ஏங்குறேன்
உயிர் பிரிவதற்குள் கிடைக்குமா
ஐயத்தோடு தங்குறேன்....

நீ நல்லா இரு போதும் புள்ள
என் கூட சண்டை  - இனியும்
நியாயமில்ல....

மார்க்ஸ் பாரதி
சாவதும் இல்ல.....!!! - இந்த
மண்ணில் எனக்கும் சாவே இல்ல.......!!!!!

     - சோலச்சி புதுக்கோட்டை