சனி, 29 ஏப்ரல், 2017

சிற்றிதழ்கள் உலகம் - 3

சிற்றிதழ்கள் உலகம் மின்னிதழ் - 3 இல் முகப்பு அட்டையில் என் புதைப்படமும் உள்ளே கவிதையும் இடம் பெறச் செய்த ஆசிரியர் தோழர் கிருஸ்.ராமாதாசு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி ......

ஏப்ரல் 2017

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

காட்டு நெறிஞ்சி - வழக்கறிஞர் எஸ்.ரமேஷ் திருவில்லிபுத்தூர்

"நீர்த்த உரைநடைக்குள் வீர உணர்வுகள் "

கவிதை விமர்சனம்

    எஸ்.ரமேஷ் திருவில்லிபுத்தூர்

கவிமதி சோலச்சி எழுதிய "காட்டு நெறிஞ்சி " என்ற கவிதை நூலுக்கு விமர்சனம்.

நூல் : காட்டு நெறிஞ்சி
ஆசிரியர் : கவிமதி சோலச்சி
வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி
வருடம் : 2016
பக்கம் :128
விலை :110/-

  தற்கால கவிதை இலக்கியம் குறித்து எனக்கு ஒரு நன்னம்பிக்கை இல்லை.  அதிலும் புதுக்கவிஞர்கள் புற்றீசல்களாய், ரத்தத்தின் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை போல் பல்கிப் பெருகிவிட்ட தேசத்தில்,  கவிதை இலக்கியம் மிகுந்த அலங்கோலமாய்க் காட்சியளிக்கிறது.  தமிழில் உரைநடை எழுத்தத் தெரிந்தவர்கள் எல்லாமே புதுக்கவிஞர்கள் தான் என வைத்துக்கொண்டால் அநேகமாக பலசரக்குக் கடையில் மளிகைச் சரக்குக்கு ரசீது எழுதி தரும் குமாஸ்தாவும் ஒரு புதுக்கவிஞர்தான்.

  ஒரு நீண்ட உரைநடை வரியை மடக்கி மடக்கி எழுதி அதைக் கவிதை என்று பெயரிட்டு அழைப்பது, காண்டாமிருகத்தைக் கோயில் யானை எனப் பெயரிட்டு அழைப்பதற்குச் சமானமாகும்.

   வசன கவிதை என்ற இலக்கிய வடிவத்தை உருவாக்கிய பிதாமகர் என்று நாம் சுப்பிரமணிய பாரதியைக் கொண்டாலும்,  யாப்பு கட்டுமானத்தை மீறி ஒரு புதிய வடிவத்தை உருவாக்கிய ந.பிச்சமூர்த்தியை புதுக்கவிதை இயக்கத்தின் மூத்த ஸ்தாபகர் என்று கொள்ளலாம்.

  கவிமதி சோலச்சியின் புதுக்கவிதை தொகுதியான "காட்டு நெறிஞ்சி "வாசிக்கப் பெற்றேன். புதுக்கவிதைகளுக்கான சகல பொருத்தங்களும் இதற்கு பொருந்தியுள்ளன.நான் வாசித்தவற்றுள், எனக்கு தோன்றியவற்றை இங்கு விமர்சனமாக முன் வைக்கிறேன். 

  இத்தொகுதியில் பக்கம் 19 இல் "சுதந்திரமாம் சுதந்திரம் " என்னும் கவிதையில் "விண்ணையும் தாண்டிவிட்டது விதவிதமாய் ஊழல்கள் " என்ற வரிகள் நல்ல வரிகள்.  காற்று, நிலம், நீர்,  ஆகாயம், வாகனம் தொடங்கி அரிசி, கோதுமை நுகர்பொருள், தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம், வேளாண்மை,  ராணுவம் என்று சகல துறைகளிலும் ஊழல் செய்து புகழ் பெற்ற நாடு நம் இந்தியா. இதைக் கவிஞர் சோலச்சி சுட்டிக் காட்டியுள்ள விதம் அருமை.

  வீட்டு வேலையும், விருந்தினர் உபசரிப்பும் காத்திருக்கிறது, விளம்பர இடைவேளைக்காக.....!

   விருந்தோம்பல் என்பது நம் தமிழரின் பண்டைய மரபு. இன்றைக்கு விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தாலும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களைத்தான் நமது இல்லத்தரசிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நயமாகச் சுட்டிக்காட்டியுள்ளார் கவிஞர்.

  சில கிராமப்புற இளமைக்கால நினைவுகள் நமது மனத்திரையில் அவ்வப்போது தோன்றுவது போல சோலச்சிக்கும் தோன்றுகிறது.

  "பார்வை " என்ற கவிதை
எங்கு பார்த்தாலும்
எழுதிவிட்டுத்தான் செல்கிறேன்
என்னோடு உன் பெயரையும்
கள்ளிச் செடிகளில்....

இது நல்ல அழுத்தமான பதிவு.

  பக்கம் 38 இல் "மலரும் நானும் " என்ற கவிதை. பாலியல் தொழிலாளியைப் பற்றியது.
"விளக்குகள் யாவும் சிவப்பாகவே...
உறக்கமின்றித் தவிக்கும்
என் கண்களுக்கு ....

எங்கோ மலர்களிடம்
எச்சங்களைச் சுமந்தபடி நான்.....

இவை நல்ல வரிகள்.

பக்கம் 47இல் "வாழ்க்கை ஒரு பாடம் " என்ற கவிதை. அதில்
"பேதங்களை உடைத்தெறிந்த பெரியார்
நேதாஜி பகத்சிங் பூமி....

ஈ.வே.இராமசாமி என்பவர் பேதங்களை உடைத்ததாகவும்,  அவர் சாதியத்திற்கு எதிராகப் போராடியதாகவும் ஒரு கருத்து உள்ளது. ச.வெங்கடேசன் என்பவர் எழுதியுள்ள ஈ.வே.இராமசாமியின் மறுபக்கம் " என்ற நூல் ஈ.வே.ராவின் உண்மை முகத்தை நமக்கு தோலுரித்துக் காட்டுகிறது.

   பக்கம் 50 இல் "எப்படித் துணிந்தாய் "என்ற கவிதை. அதில்,

"மூத்தகுடி எம் குடியென
மார்தட்டி வாழ்ந்தேன் அன்று.....
.........,,,,
என் இனம் அழிவதைத் தடுக்கத் துப்பில்லை
தேசீயக் கீதம் ஒரு கேடா.....???

  தேசியக்கீதம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை.  கேரளாவில் மலையாளுகளும், கர்நாடகாவில் கன்னடியர்களும் ஆந்திராவில் தெலுங்கர்களும் எந்தவொரு பொதுப் பிரச்சினை என்றாலும் அம்மாநில நலனுக்கு ஒற்றுமையாகக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை என்ன....?????? சொந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களும்,  இனத் துரோகிகளும் இருக்கும் மாநிலமல்லவா தமிழ்நாடு. இதில் நீங்கள் தேசியகீதத்தைப் பழிப்பது எப்படி சரியாகும்.

   பக்கம்  86 இல் "கிழட்டுப் பச்சோந்தியின் கோணப் புத்தியில் ஆட்சி " இது யாரைக் குறிப்பிடுகிறார் சோலச்சி.....???

பக்கம் 89 இல் "பகடை " என்ற கவிதை .... தேர்தலின் போது ஓட்டு வேட்டையாடி,  வெற்றி பெற்று,  பதவியைப் பிடித்து, தமிழனை மொட்டையடித்து,  தலையில் சந்தனம் தடவி விட்ட தலைவர்களை வைத்துக்கொண்டா, நீங்கள் "தனி ஈழம் அமைப்போம் " என்கிறீர்கள்.
  
  வருடாவருடம்,  தமிழ்நாட்டின் தலைவர்கள் சூளுரைத்து சபதம் செய்யும் ஒரு விசயம் "கச்சத்தீவை மீட்போம் "என்பது. இந்த வீர முழக்கத்தைக் கேட்டு தமிழர்கள் பலருக்கு பைத்தியமே பிடித்துவிட்டது.

   பக்கம் 91 இல் "புதிய எழுச்சி
"உரிமைக்கு உதவ நாதியில்லை...
தமிழ் நிமிர்ந்து நடக்க ஒரு வீதியில்லை....

  நல்ல வரிகள். தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது. பக்கம் 68 இல் "தமிழ் பிழைத்தது..." என்ற கவிதை பாரதி வாழ்வு பற்றியது.

   "தமிழ்ப் பேர் சொல்லி
உலகு பிழைக்குதடா...
தமிழ் இவனிடம் பிழைத்ததடா...

  என்ற வரிகள் அற்புதமானவை.

பக்கம் 79 இல்  பில்லி சூனியம் என்ற கவிதை. 
"கடவுள் என்று எதுவும் இல்லை
கண்டது யார்
காட்டு என்றால் பதிலும் இல்லை ....

   கவிஞர் சொல்வது உண்மை.  ஆனால் இந்த ஞானோதயம் இப்போது வருவதற்கும்,  அறுபது வயதில் வருவதற்கும் இடையில் ஒரு வித்தியாசம் உண்டு.

  கடவுள் என்று எதுவும் இல்லை  என்று இந்துக் கடவுளை மட்டும்தான் குறிப்பிடுகிறாரா அல்லது இஸ்லாமிய, கிறித்தவக் கடவுள்களையும் சேர்த்துக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை.

பக்கம் 96 இல் "இனியொரு தப்பு நடந்தால் " கவிதையில்

"மேல்சாதி கூட்டம்னா
நெத்தியிலா முளச்சிருக்கு...
.....,,,
.....,,, இனி
வெடைச்சிச்சுனா வெட்டிடுவோம் பாத்துக்கோ....."

  என்ற வரிகள் வன்முறை, குரூரத்தின் உச்சம். இந்த வரிகள் பிரபல மேடைப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்யின் பேச்சுகளை நினைவுபடுத்துகிறது.

   பக்கம் 105 இல் "மாடும் அந்த மனிதனும் " என்ற கவிதை அருமை.

பக்கம் 108 இல் கடவுள் வழிபாடு பற்றிக் குறிப்பிடும் கவிஞர், பாவம் மனிதன் என்ற கவிதையில்
"எல்லாவற்றிலும் அதைப் படைத்தவன் பெயரஸ, தேடிப் பார்க்கிறேன்,  காணவில்லை இறைவன் பெயரை....என்ற வரிகள் அற்புதமானவை. ஆனால் தனிமனிதனின் நம்பிக்கை என்ற விசயத்தில்  குறிக்கிடுவது என்பது சரியாகாது.

    பக்கம் 118இல் "விடியல் " என்ற கவிதை
"காரில் கை அசைக்கும் காட்சி கண்டு கழகம் கட்டியணைப்பதாய் மகிழ்கின்றார்...." என்ற வரிகள் மோசடிக் கும்பல்களான கரை வேட்டி கும்பல்களை தெளிவாக அடையாளம் காட்டுகிறார் கவிஞர் சோலச்சி. பல இடங்களில் நயமான வரிகள் காணப்படுகின்றன.

   ஆக, புதுக்கவிதைகளுக்கே உரிய நடையில்,  பரவலாக அறியப்பட்ட பாடுபொருட்களாகிய காதல்,  வீரம், சமூக அவலம், அரசியல் சீர்கேடு, ஈழப் பிரச்சினை,  பாரதி புகழ் ஆகியவற்றை தனக்கே உரிய நடையில் படைத்துள்ளார் கவிமதி சோலச்சி.

   உரைநடை மிகுந்தும், சந்த தாளம் குறைந்தும் வீரப்பிரகடனங்களும் முழக்கங்களுமாக இந்நூல் அமைந்துள்ளது.

வரும் காலங்களில்,  வார்த்தைகளினய அடர்த்தியில், வேறு பல பாடுபொருட்களை உள்ளடக்கி நல்ல ஓசை, தாளத்தோடு இன்னும் பல சீரிய கவிதைகளை கவிமதி சோலச்சி படைத்திட விரும்புகின்றேன்.  நன்றி வணக்கம் வந்தே மாதரம்...!!!

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை

வாட்ஸ் அப்பில் வந்தது .... நன்றி

பாட்டுடைக் கவிஞன் பாரதிக்குப் பிறகு,
தமிழ்க்கவிதையில்,  எளிமையும், இனிமையும்,
புதுமையும் புகுந்து நவீன கவிதை பிறந்தது. . தமிழ்க் கவிதை மரபில் உடைப்பு ஏற்பட்டது. கவிதை புதிய பரிமாணத்தில், புதிய களங்களில்,தளங்களில்
பயணித்தது. இவர்களை தமிழ் உலகம் பாரதி பரம்பரையினர் என்று பெருமை படுத்துகிறது. இந்தப் பரம்பரையில் வந்த பாரதிதாசனனும், ,
பட்டுகோட்டை கல்யாணசுந்தரமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். துரோணரை நேரில் கண்டு பயிற்சி பெறாமலே அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு வில்வித்தை படித்து ,தலை சிறந்தவனாய் விளங்கிய ஏகலைவன் போல,பாவேந்தர் பாரதிதாசனை நேரிலே பார்க்காமலே அவரை தனது மானசீக குருவாக ஏற்று,
பாரதிதாசனே வியந்து பாராட்டும் கவிஞராகத் திகழ்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
'பாட்டுக்கோட்டை'யான
பட்டுக்கோட்டை..!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 -
அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர்,
பாடலாசிரியர்.. எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடுவது இவருடைய சிறப்பு. . இப்போது இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 29 ஆண்டுகளே வாழ்ந்தாலும் தான் எழுதிய பாடல்களால் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும்
'பாட்டுக்கோட்டை'யாகவே அறியப்பட்டவர் பட்டுக்கோட்டையார். திரையுலகப் பாடல்களில் பட்டிருந்த கறைநீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும்,
வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்களளும், முற்போக்குக் கருத்துக்களும் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர்
பட்டுக்கோட்டையார். கிட்டத்தட்ட 189 படங்களில் பாட்டு எழுதி பெருமை தேடிக்கொண்டவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
கவி பாடும் விவசாய குடும்பம்..!
தமிழ் நாட்டின் தஞ்சை மண்ணில்,
பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் குக்கிராமத்தில்,
அருணாச்சலனார் –
விசாலாட்சியின் இளைய மகனாக 13.04.1930-ல் பிறந்தார். அது ஓர் எளிய விவசாய குடும்பம்.இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். 'முசுகுந்த நாட்டு வழி நடைக்கும்பி' எனும் நூலையும் அவர் தந்தை இயற்றியிருக்கிறார். தந்தை கவிஞராக இருந்ததால்,
மகன்களான கணபதி சுந்தரமும்,
கல்யாண சுந்தரமும் கவிபாடும் திறத்தை வளர்த்துக் கொண்டனர்..
அண்ணன் தந்த கல்வி..!
பட்டுக்கோட்டையார் துவக்கக்கல்வியை அண்ணன் கணபதிசுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தார். அத்துடன் அவரது பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. அவருக்குத் திண்ணைப் பள்ளிக்கூடம் செல்ல பிடிக்கவில்லை. 2-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிக்கு போகவில்லை.தன் அண்ணனிடம் அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டார்.அவருக்கு வேதாம்பாள் என்ற சகோதரி இருந்தார். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும்,
கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள்.
   மக்கள் கவிஞனின் மகத்துவம்..!
தனது 19 வது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர் பட்டுக்கோட்டையார். . இவருடைய பாடல்கள் கிராமியப் மணம் கம்ழுபவை. பாடல்களில் உணர்ச்சிகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைக் கனவுகளையும்,
ஆவேசத்தையும், அற்புத பாடல்களாக வடித்து,
இசைத்தார். இவர் இயற்றிய கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டது. 1955ஆம் ஆண்டு
“படித்த பெண்’
திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். உழைப்பாளி மக்களும், அறிவால் உழைக்கும் மக்களும் கூட தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்து வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியரை இவரிடம் இருந்ததைக் கண்டனர்.
பட்டுக்கோட்டையின் இளமை..!
பட்டுக்கோட்டை பாடுவதிலும்வல்லவர். . நாடகம் திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர்.இதுவே இவரை
இயல்பாகவே கவிதை புனைய வைத்தது.. 1946 இல் தனது
15வயதில் ஏற்பட்ட அனுபவத்தை அவரே கூறுகிறார். 'சங்கம் படைத்தான் காடு என்ற எங்கள் நிலவளம் நிறைந்த சிற்றூரைச் சேர்ந்த துறையான்குளம் என்ற ஏரிக்கரையில் நான் ஒரு நாள் வயல் பார்க்கச் சென்று திரும்பும் போது வேப்பமரநிழலில் அமர்ந்தேன். நல்ல நிழலோடு குளிர்ந்த தென்றலும் என்னை வந்து தழுவவே எதிரிலிருக்கும் ஏரியையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தேன். தண்ணீரலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள் "எம்மைப் பார், எம் அழகைப் பார்" என்று குலுங்க, ஓர் இளங்கெண்டை பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்தவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. அதுவரை மெளனமாக இருந்த நான் என்னையும் மறந்தவனாய்ப் பாடினேன்” என்றார்..
அதுதான் இது.
ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே –
கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே

கரை தூண்டிக்காரன் வரும் நேரமாச்சு –
ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே
இவ்வாறு ஆரம்பித்த நான் வீடு வரும்வரை பாடிக்கொண்டு வந்தேன். அப்பாடலை பலரும் பலமுறை பாடச் சொல்லி மிகவும் இரசித்தார்கள்.என்றார்.
இடதுசாரி இயக்கத்தின் இடையறா ஈர்ப்பாளி..!
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர்,
நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
பட்டுக்கோட்டையின் பன்மமுக பரிமாணங்கள்..!
1. விவசாயி
2. மாடுமேய்ப்பவர்
3. மாட்டு வியாபாரி
4. மாம்பழ வியாபாரி
5. இட்லி வியாபாரி
6. முறுக்கு வியாபாரி
7. தேங்காய் வியாபாரி
8. கீற்று வியாபாரி
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10. உப்பளத் தொழிலாளி
11. மிஷின் டிரைவர்
12. தண்ணீர் வண்டிக்காரர்
13. அரசியல்வாதி
14. பாடகர்
15. நடிகர்
16. நடனக்காரர்
17. கவிஞர்
தன்மானம் மிக்க பட்டுக்கோட்டையார்..!
திரை உலகில் நுழைய பட்டுக்கோட்டையார் சென்னைக்கு வந்து ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெருவில் 10-ம் நெம்பர் வீட்டில் ஒரு அறையை 10
ரூபாய்க்கு வாடகைக்கு பிடித்தார். சிறிய அறை. அதில் அவரது நண்பர்களான ஓவியர் கே.என். ராமச்சந்திரனும், நடிகர் ஓ.ஏ.கே.தேவரும் தங்கி இருந்தனர். பட்டுக்கோட்டை துவக்க காலத்தில் பணத்துக்கு கஷ்டப்பட்டாலும் துணிச்சல்காரராகவும் தைரியசாலியாகவும்
இருந்தார். சினிமா கம்பெனி ஒன்றுக்கு அவர் பாட்டெழுதி கொடுத்தார். பணம் வந்து சேரவில்லை. பணத்தை கேட்க பட அதிபரிடம் சென்றால்,. 'பணம் இன்னிக்கு இல்லே! நாளைக்கு வந்து பாருங்கோ' என்று பதில். ஆனால் கல்யாணசுந்தரமோ பணம் இல்லாமல் நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார்.
'நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்' என்ற பட அதிபர் வீட்டிற்குள் போய்விட்டார்.உடனே கல்யாணசுந்தரம் சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும், பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி,
மேஜை மீது வைத்துவிட்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் படக்கம்பெனியைச் சேர்ந்த ஆள் பணத்துடன் அலறியடித்துக் கொண்டு கல்யாணசுந்தரத்திடம் வந்து பணத்தை கொடுத்தார். அப்படி என்னதான் அந்த சீட்டில் எழுதினார் பட்டுக்கோட்டை?
இதோ 'தாயால் வளர்ந்தேன்;
தமிழால் அறிவு பெற்றேன்;
நாயே! நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்;
நீ யார் என்னை நில் என்று சொல்ல?'இதைப் படித்துப் பார்த்த பட அதிபர் அசந்து போனார். பணம் வீடு தேடி பறந்து வந்தது.
மனித நேயம் மிக்க பட்டுக்கோட்டையார்..!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் அற்புதமான கவியாற்றலில் மனதை பறிகொடுத்தவர் கவியரசு கண்ணதாசன். அதுபோலவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனிடம் மிகுந்த அன்பு கொண்டவர்.ஒரு புகழின் உச்சியில் இருந்து.ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களுக்கு பாடல் எழுதி வந்த பட்டுக்கோட்டையை,  கண்ணதாசன் நேரில் சந்தித்து,
ஒரு பாடல் எழுதித் தருமாறு கேட்டதிற்கு , அவர் மிகுந்த பற்றுதலோடு பாடல் எழுதித்தர இசைந்ததை கண்ணதாசன் ஒரு சமயம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.மனித நேயமும், துணிச்சலும்,
தன்னம்பிக்கியும் உள்ள மாமனிதர் பட்டுக்கோட்டையார்.அந்த காலத்தில் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர் திரைப்பட கவிஞர்களைஏளனமாகவும்,
கேலியாகவும் விமர்சித்தார். கவிஞர் கண்ணதாசனும் அதற்குப் பலியானார். ஒரு விழாவில்
பத்திரிகை ஆசிரியரை பட்டுக்கோட்டையார் சந்தித்தபோது, க்ண்ணதாசனைக் குறிப்பிட்டு, ” என்னடா கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்கு கவிதையைப் பற்றி என்னடா தெரியும்?'' என்று கேட்டு உதைக்கப் போனார்.
எளிமையான பட்டுக்கோட்டை..!
’’உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” -பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிருபரை ராயப்பேட்டையிலிருந்த தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம் நடந்திருக்கிறார். பிறகு இருவரும் ரிக்ஷாவில் ஏறி மௌண்ட் ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். அப்புறம் பஸ்ஸைப் பிடித்து கோடம்பாக்கம் ரயில்வே கேட்டில் இறங்கி இருக்கின்றனர். கேட்டைக் கடந்து ஒரு டாக்ஸி பிடித்து வடபழநியில் தம் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்கினார்கள். கூடவே வந்த நிருபர், “கவிஞரே, வாழ்க்கை வரலாறு” என்று நினைவூட்டி இருக்கிறார். உடனே பட்டுக்கோட்டையார், “முதலில் நடையாய் நடந்தேன்,
ரிக்ஷாவில் போனேன், பிறகு பஸ்ஸில் போக நேர்ந்தது. இப்போது டாக்ஸியில் போகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுல எங்கே இருக்குது வரலாறு?” என்று சிரித்துக்கொண்டே போய்விட்டாராம். இந்த எளிமைதான் பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம்
வேடிக்கையும், விவேகமும் மிக்க கவிஞர்..!
ஒரு சமயம் சென்னையில் நகரப் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வழியில் ஒரு இடத்தில் சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அங்கே பழுது பார்க்கும் வேலை நடப்பதை அறிவிக்க வாகனங்களுக்கு எச்சரிக்கையாக சிவப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே வந்த பட்டுக்கோட்டையார் தன் அருகிலே இருந்த நண்பரிடம், 'எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்பட வேண்டுமோ, அங்கே எல்லாம் சிவப்பு கொடி பறந்துதான் அந்த பணிகள் நடக்க வேண்டும் போலும்' என்றார்.
ஒரு சமயம் பொதுவுடமை இயக்கத்திற்காக நாடகம் நடத்த சென்றிருந்த பட்டுக்கோட்டையார் நாடகத்திற்கு சரியான வசூல் இல்லாமல் தங்கள் குழுவினருடன் பசி,
பட்டினியுமாக சென்னை திரும்ப பேருந்தில் ஏறினார். பேருந்தில் அமர்ந்திருந்த தங்கள் குழுவினர் அனைவரும் சோர்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள். அவர்கள் சோகத்தை மாற்றி அவர்களுக்கு குதூகலத்தை தர பட்டுக்கோட்டையார் அங்கேயே ஒரு பாடல் எழுதி, அதனை சத்தமாக பாட ஆரம்பித்தார். அந்த பாடலை கேட்டதும் நாடக குழுவினருக்கு பசி பறந்துவிட்டது. அனைவரும் குதூகலமாக கைகளை தட்டி பாட ஆரம்பித்தார்கள்.
'சின்னக்குட்டி நாத்தனா
சில்லறைய மாத்துனா
குன்னக்குடி போற வண்டியில்
குடும்பம் பூரா ஏத்துனா!'
-இந்த பாட்டு ஆரவல்லி படத்தில் வருகிறது..!
பட்டுக்கோட்டையார் சிறந்த தத்துவப் பாடல்கள் மட்டுமின்றி,
நகைச்சுவை பாடல்களுலும் வல்லவர்.
'ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு - இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு!'
பட்டுக்கோட்டை . 'நான் வளர்த்த தங்கை' என்ற படத்திலே போலி பக்தர்களை நையாண்டி செய்கிறார்
'பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே... ஹா... ஹா...
பசியும், சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை'
சமுதாயப் பாடல்களை ஏராளமாக எழுதி இருக்கிறார்.
'வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்...
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்...'
'சங்கிலித் தேவன்' என்ற திரைப்படத்தில்
'வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடு கட்டும் தொழிலாளி!
ரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு
காரு ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக் கதிரி விவரம் கண்ட
சர்.சி.வி.ராமனும் தொழிலாளி
”பொறக்கும் போது - மனிதன்
பொறக்கும் போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது”
படம்: சக்கரவர்த்தி திருமகள் 1957
'திருடாதே' திரைப்படத்தில் குழந்தைகளுக்கு சொல்வது போல பெரியவர்களுகு பொதுவுடமை போதித்தல்.
'கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது.
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது.
ஒதுக்கிற லையும் இருக்காது.
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம்
வளராது மனம்
 என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
கருத்தாழமும் அறிவுக்கூர்மையும் சமூகசமத்துவம் பற்றிய வேட்கையும் விடுதலை உணர்வும் ஆத்மநேயத் துடிப்பும், இயற்கை மனிதர்கள் மீதான நேசிப்பும் என விரிவு கொண்டதாகவே பட்டுக்கோட்டையாரினது கவிதை வெளி இருந்தது. அவரது திறமைக்கும் ஆற்றலுக்கும் அவரின் ஆயுள் மிகக் குறுகியது.29 ஆண்டுகள் மட்டுமே..!ஆனால் அவர் விட்டுச் சென்றுள்ள தடம் ஆழமானது.
1959-ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும்,
கௌரவாம்பாளுக்கும்,
குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959)
பட்டுக்கோட்டை அகால மரணம் அடைந்தார்.
பட்டுக்கோட்டை பற்றிய
ஆவணப்படம்...!
பட்டுக்கோட்டையாரைப் பற்றி ஆவணப்படம் எடுத்திருக்கிறார்,
அம்பத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன். இதில் பட்டுக்கோட்டையாரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது கவிதை உலகம்,
இடதுசாரி ஈடுபாடு,
வறுமை, திரை அனுபவங்கள் அனைத்தும் அவருடன் நெருக்கமானவர்ளுடனான பேட்டிகளின் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையாரின் மனைவி கௌரவாம்பாள்,
அவரது பால்ய நண்பர் சுப்ரமணியம், தியாகி மாயாண்டி பாரதி,
எம்.எஸ்.விஸ்வநாதன், உள்பட கவிஞருக்கு நெருக்கமானவர்கள் அனைவரின் பேட்டிகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும்,
கவிஞரின் முக்கியமான 12 திரைப்பாடல்களின் காட்சியும்,
அவரது அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது ஆவணப் படத்தின் தரத்தை உயர்த்துகிறது.
பட்டுக்கோட்டையாரின் துணைவியின் பதிவு..!
“எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும்‘அவுக’ளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு ஊருக்குத் திரும்பும்போது, ‘பொண்ணு எப்படிடா இருக்கு’ன்னு அண்ணன் கேட்க, ’அழகாதான் இருக்கு’ன்னு இவுக சொல்லிருக்காக.‘
உனக்குத்தான்டா இந்தப் பொண்ணு’னு அண்ணன் சொன்னதும், இவுகளுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சாம். அப்போ வீட்டுல வந்து எழுதுனதுதான், ஆடை கட்டி வந்த நிலவோ, கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ பாட்டு. இப்போ தெரிஞ்சுக்கோங்க நாந்தான் ஆடைகட்டி வந்த நிலவு”என்று மலர்ந்து சிரிக்கிறார் கௌரவம்மாள்.“அன்னைக்கு அவுக அண்ணன் பொஞ்சாதிக்கு வளைகாப்பு. அப்போ நான் கிண்டலா, ‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் மொகத்துல பொன் சிரிப்பு’ன்னு சொன்னேன். இதை, ‘கல்யாணப் பரிசு’படத்துல, அவுக பல்லவியா போட்டு பாட்டா எழுதிட்டாக. ‘இது நீ எழுதுன பாட்டு. இந்தா பிடி சன்மானம்’னு அந்தப் பாட்டு எழுதுனதுக்குக் கிடைச்ச பணத்தை என் கையில கொடுத்தாக.
கல்யாணப்பரிசு
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போர வார்த்தையை நல்லா
எண்ணிப்பாரடா. (படம்: அரசிளங்குமரி - 1957)
குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்.
குள்ள நரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம்.
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ,
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா ,
எந்த நேரமும் சண்டைn ஓயாத முரட்டு உலகமடா ,
விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா ,
சிலர்குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா “.