திங்கள், 11 ஜூலை, 2016

சுவாதி கொலை வழக்கு சந்தேகங்கள்...

பகிர்வு செய்தி....

சுவாதி கொலை வழக்கு சந்தேகங்கள்....

     #ஸ்வாதி_கொலை_வழக்கு
வழக்கறிஞர்:வள்ளிநாயகம் சுட்கி
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது” என்று சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞரான எனக்கு கொலை வழக்கின் விசாரணைப் போக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இக்கேள்விகள் எனது தனிப்பட்ட ஐயங்கள் மட்டும் இல்லை. பெரும்பாலான மக்கள் விளக்கம் எதிர்பார்த்து எழுப்பும் சந்தேகங்களும் இவையே.

ராம்குமார் என்ற நபரை கொலையாளி என்று காவல்துறை கைது செய்துள்ளது. உண்மைக்கும் இவர்தான் குற்றவாளி எனில் கண்டிப்பாக இவர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் விசாரணையின் நகர்வுகளைக் காணும் பொழுது உண்மையிலேயே ராம்குமார்தான் கொலையாளியா என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியே ராம்குமாருக்கும் ஸ்வாதியின் கொலைக்கும் தொடர்பு இருப்பின் அவர் மட்டுமே இந்த கொலையில் சம்மந்தப்பட்டுள்ளார் என்பது எந்தளவு உண்மை? கொலைக்கு காரணமாக கூறப்படும் ஒருதலை காதல் கதை மெய்யாக நிகழ்ந்த ஒன்றா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் குழப்பங்களும் நிறைந்த இவ்வழக்கின் முடிச்சுகளை அவிழ்க்க நான் எடுத்துள்ள முயற்சி இந்த பதிவு.

இந்த வழக்கைப் பற்றி முகநூலில் நான் எழுதுவதால் எந்தவொரு இனத்திற்கோ மதத்திற்கோ ஆதரவானவன் அல்லது எதிரானவன் என்று யாரேனும் கருதினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. ஒரு வழக்கறிஞரான நான் பொதுப்படையாக, வெளிப்படையாக எழுப்பும் கேள்விகள் இவை.

ராம்குமார் கைதாவதற்கு முன்:
ஜூன் 24 அன்று காலை நேரம் சுமார் 6.40 மணி அளவிற்கு ஸ்வாதி வெட்டிக் கொலை செய்யப்படுகிறார். கொலையை பார்த்த நேரடி சாட்சிகள் பலர் அங்கு இருந்துள்ளனர். ஒருவரும் கொலையாளியைப் பிடிக்க முயலவில்லை. கொலையாளி தப்பித்து விடுகிறான். சுமார் இரண்டு மணி நேரங்களாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் கிடந்த ஸ்வாதியின் சடலம் காவல்துறையின் சம்பிரதாயங்கள் முடிவடைந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நொடி கொலையாளியின் தேடுதல் வேட்டை ஆரம்பமாகிறது. ஸ்வாதியின் செல்போன் காணவில்லை என்று தெரிய வருகிறது. காதல், குடும்ப பிரச்சனை, அலுவலக பிரச்சனை போன்ற பல கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.

தொழில்நுட்பங்களின் உதவிகளோடு (சமூக வலைதளங்கள், சி.சி.டி.வி, செல்போன் டவர்) தேடுதல் நடக்கிறது. சி.சி.டி.வி.யில் பதிவான இருவேறு உருவங்கள் கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன. இரண்டு படங்களிலும் வித்தியாசங்கள் உள்ளன என்று அவற்றைப் பார்த்தாலே நமக்கு புலப்படுகின்றது. கொலையாளி பயன்படுத்திய ஆயுதம் என்று ஒரு அரிவாள் கண்டெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிலால் மாலிக் என்பவர்தான் கொலையாளி என்ற தகவல் பரவுகிறது. கொலைக்கு காரணம் லவ் ஜிகாத் என்று புரட்சி எழும்ப கோஷம் இடப்படுகிறது. பிலால் மாலிக்கை காவலில் எடுத்து விசாரித்ததாக தெரியவில்லை. மாறாக அவரது பேட்டி ஊடகங்களில் வெளியிடப்படுகிறது. ஸ்வாதியின் தோழி ஒருவரும் அவரது குடும்பத்தாரும் ஸ்வாதியை யாரோ சில காலமாக பின்தொடர்ந்து வந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். கொலையை நேரில் பார்த்த ஒருவர் ஸ்வாதி கொலையாவதற்கு சில நாட்கள் முன் யாரோ ஸ்வாதியை ரெயில் நிலையத்தில் வைத்து அறைந்ததாகவும் ஆனால் அறைந்த நபர் கொலை செய்தவர் இல்லை எனவும் கூறுகிறார்.

ஸ்வாதியின் முகநூல் பக்கம் முடக்கப்படுகிறது. ஸ்வாதியின் தந்தை விசாரணை என்ற பெயரில் காவல்துறை தன் குடும்பத்தாரை தொந்தரவு பண்ணவேண்டாம் என்று முதலமைச்சருக்கு மனு செய்கிறார்.

ராம்குமாரின் கைது:
ஜூலை 1 அன்று நள்ளிரவில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையின் மீனாட்சிபுரத்தை சேர்ந்த பண்பொழில் கிராமத்தில் ராம்குமார் என்பவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கைது செய்யப்படுகிறார். அவர்தான் கொலையாளி என்று புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின்றன. ராம்குமார் சென்னை சூளைமேட்டில் ஸ்வாதியின் வீட்டிற்கு அருகில் ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கி இருந்ததாகவும் அவருடன் தங்கி இருத்த நடேசன் என்பவர்தான் அடையாளம் காண்பித்து ராம்குமாரை கைது செய்ய உதவியதாகவும் கூறப்படுகிறது. ராம்குமாருக்கு சிகிச்சை அளித்து வாக்குமூலம் பெற்றுவிட்டதாகவும், ராம்குமார் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், ஒருதலைக்காதல் தான் கொலைக்கான காரணம் என்றும் காவல்துறை சார்பாக பேட்டிகள் வெளியாகின்றன. ராம்குமாரின் இல்லத்தில் இருந்து ஸ்வாதியின் செல்போனும் ஸ்வாதியின் ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராம்குமார் புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார். வழக்கறிஞர் ஒருவர் ராம்குமாரின் சம்மதம் இன்றி அவர் சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்தது பெரும் சந்தேகத்திற்கு இடமாகி பின்னர் அந்த வழக்கறிஞர் வழக்கிலிருந்து விலகுகிறார். ராமராஜ் என்ற வழக்கறிஞர் ராம்குமாரை சந்தித்து ராம்குமாரின் கைதில் நிறைய மர்மங்கள் இருப்பதாக பேட்டியளிக்கிறார்.

வழக்கின் சூழ்நிலைகள் இப்படி இருக்க எனக்கு உண்டாகும் சந்தேகங்கள் என்னவென்றால்,
1) சி.சி.டி.வி.யில் பதிவான அந்த உருவம் மட்டுமே கொலையாளியை நெருங்குவதற்கான கருவியாக கருதப்பட்ட நிலையில் அந்த உருவம் ராம்குமார்தான் என்று எதன் அடிப்படையில் போலீசார் முடிவெடுத்தனர்?

2)சிகிச்சையில் இருந்த ராம்குமாருக்கு சரிவர மயக்கம் தெளியாத பொழுதே வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் கொலைக்குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் அவர் மட்டுமே குற்றவாளி என்றும் போலீஸ் தரப்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறப்பட்டது. வேறு யாரும் ராம்குமாருக்கு உடந்தை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. தெளிவான விசாரணை நடத்தாமலேயே ஒரு விசாரணை கைதியை குற்றவாளி என்றும் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் அறிவித்ததன் காரணம் என்ன?

3) கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்ட நிலையில் ஜூலை 2ஆம் தேதியே ராம்குமாரால் எப்படி வாக்குமூலம் கொடுக்க முடிந்தது? ராம்குமாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ராம்குமார் நன்றாக பேச 2 முதல் 7 நாட்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்தது உண்மை எனில் நிஜமாகவே வாக்குமூலம் பெறப்பட்டதா?

4) முறையாக அடையாள அணிவகுப்பு நடத்தாமல் ராம்குமாரின் புகைப்படத்தை கொலையாளி என்று கூறி ஊடகங்களில் வெளியிட்டது ஏன்?

5) சி.சி.டி.வி.யில் உருவம் பதிவான அதே இடத்தில் ராம்குமாரை கொண்டு போய் நடக்க வைத்து உருவ ஒற்றுமை சோதனை நடத்தப்படாமல் தெளிவற்ற அந்த உருவம் ராம்குமார்தான் என்று ஆணித்தரமாக போலீசார் அறிவித்தது எப்படி?

6) ராம்குமார்தான் கொலையாளி என்று போலீஸார் அறிவித்த பிறகு கொலையை நேரில் பார்த்த நேரடி சாட்சியங்கள் யாரேனும் ராம்குமார்தான் ஸ்வாதியை வெட்டினார் என்று உறுதி தெரிவித்தனரா?

7) ஸ்வாதி யாரோ ஒருவன் அவரை பின் தொடர்வதாக கூறினார் என்றும் அந்த நபரை தான் சில முறை பார்த்துள்ளதாகவும் அவரது தோழி ஒருவர் கூறியிருந்தார். பிடிபட்ட ராம்குமார்தான் பின் தொடர்ந்த அந்த நபர் என்று அந்த தோழி ஊர்ஜிதப்படுத்தினாரா?

8) ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனும் சுவாதியின் வீடும் அருகிலேயே உள்ளன. கொலை நடந்த இரண்டு நாட்களிலேயே சி.சி.டி.வியில் பதிவாகியிருந்த நபரின் முகத்தை ஸ்கெட்ச் செய்து சுவாதியின் வீடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் காட்டி விசாரித்துள்ளனர். அதே மேன்ஷனிலும் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர். அங்கே மூன்று மாதங்களாக தங்கியிருந்த ராம்குமாரின் மேல் யாருக்குமே முதலில் சந்தேகம் வரவில்லையே, அது ஏன்?

9) அந்த தெருவில் தினமும் நடமாடிய ராம்குமாரை எத்தனையோ பேர் பார்த்திருக்கலாம். உணவருந்த செல்லும் இடம், செல்போன் ரீசார்ஜ் என்று ஒரு சில இடங்களில் பரிச்சியம் கூட ஆகியிருக்கலாம். அவர்களில் ஒருவருக்கு கூடவா அது ராம்குமாராக இருக்கலாம் என்ற சந்தேகம் எழவில்லை?

10) ஒரே அறையில் ராம்குமாரோடு தங்கி இருந்த நபர் காலம் தாழ்ந்து இது ராம்குமார்தான் என்று போலீசாரிடம் தெரிவிக்க என்ன காரணம்? ராம்குமாரை பிடிக்க உதவியதாக கூறப்படும் அந்த நபர் தற்பொழுது எங்கே என்ற கேள்விக்கு போலீசார் மௌனம் சாதிப்பது ஏன்?

11) ராம்குமார் சென்னையில் தங்கி ஒரு துணி கடையில் வேலை செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சந்தேகப்படும் நபர் என்று தொலைக்காட்சிகளில் ஓயாமல் அறிவிட்டிருந்த போதும் ஏன் அந்த கடையில் உள்ள யாரும் ராம்குமாரின் மேல் சந்தேகப்படவில்லை. அந்த துணிக்கடையின் பெயர் என்ன? அங்கு ராம்குமார் புகைப்படத்தை காண்பித்து போலீசார் உறுதி செய்தார்களா? ஆனால் தற்போது ராம்குமார் சென்னையில் வேலையே பார்க்கவில்லை என்று தெரியவருகிறது.

12) தமிழகம் முழுவதும் அனைத்து சமூக ஊடகங்களிலும் பரபரப்புச் செய்தியான ஸ்வாதி கொலை வழக்கும் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபர் என்ற படமும் அவரது கிராமத்திற்கும் சென்றிருக்கும் அல்லவா? அவருடன் படித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அவர்களில் ஒருவருக்கு கூடவா ராம்குமாரின் மேல் சந்தேகம் வரவில்லை?

13) கொலை செய்யப்படுவதற்கு கொஞ்ச நாள் முன்னர் சுவாதியை அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஒருவர் கன்னத்தில் அறைந்ததாகவும், அப்போது சுவாதி அடித்தவரிடம் எந்த எதிர்ப்பும்  தெரிவிக்கவில்லை எனவும், அப்போது சுவாதியின் செல்போன் கீழே விழுந்ததாகவும், அதை எடுத்துக்கொண்டு ஸ்வாதி அமைதியாக ரயில் ஏறி சென்றதாகவும் அதை நேரில் பார்த்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அடித்த நபர் கலராக இருந்தார் எனவும் கொலை செய்து விட்டு ஓடியது அன்று அடித்த நபர் இல்லை என்றும் கூறியிருக்கிறார். அப்படி என்றால் ஸ்வாதியை அத்தனை பேர் முன்னிலையில் அடித்தது யார்? அந்த நபருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு? அந்த நபருக்கும் இந்த கொலைக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்று சாமானிய மக்களுக்கே சந்தேகம் எழும் வகையில் சூழ்நிலையும் சாட்சியங்களும் இருக்கும் பட்சத்தில் இதனைப்பற்றி இதுவரை போலீஸ் தீவிரமாக விசாரித்து துப்பு துலக்காதது ஏன்? தமிழ்செல்வனிடம் முறையான போலீஸ் விசாரணை நடைபெற்றதா? அவர் கொலையாளியை நேரில் பார்த்ததாக தெரிவித்திருப்பதால் அவரை அணுகி ராம்குமார்தான் அந்த கொலையாளியா என்று கேட்டு ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதா?

14) ஸ்வாதிக்கும் ராம்குமாருக்கும் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டு அதன் காரணமாக ராம்குமார் ஸ்வாதியை ஒருதலையாக காதலித்து, அதனை ஏற்க ஸ்வாதி மறுத்தும் பின் தொடர்ந்து காதலை கூற, ஸ்வாதி கோபமடைந்து தனது உருவத்தை விமர்சித்து திட்டியதால் ராம்குமார் அவரை வெட்டி கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருவரும் முகநூல் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அத்தகைய குறுஞ்செய்திகள் போலீசாரால் கையகப் படுத்தப்பட்டனவா?

15) குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் பொதுப்படையாக மட்டுமே இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். குறிப்பிட்டு சொல்லும் படியான பின்னணி இல்லாத ராம்குமார் தென் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து தைரியமாக ஸ்வாதியை பின் தொடர்ந்து காதலை தெரிவித்ததாக கூறும்பொழுது, ஏன் அவர் தன் காதலை ஒரு முறையேனும் குறுஞ்செய்தியில் தெரிவித்திருக்கவில்லை?

16) ஸ்வாதியின் முகநூலில் ராம்குமாரின் குறுஞ்செய்திகள் இருந்திருப்பின் போலீசார் முன்னரே ராம்குமாரின் முகநூல் பக்கத்தை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. ராம்குமாரின் புகைப்படங்கள் அதில் “public”ஆக இருக்கின்றன. அப்படி பார்த்திருந்தால் அப்பொழுதே ராம்குமாரை பிடித்திருக்கலாமே? எல்லா கோணங்களிலும் விசாரணை முடிக்கி விடப்பட்டுள்ளது என்று அறிவித்த போலீஸார் இதை எப்படி தவரவிட்டனர்? அல்லது தவரவிட்டது போல நடிக்கின்றனரா?

17)  ராம்குமாரின் முகநூலில் சுமார் 300 நண்பர்கள் இருந்துள்ளனர். அவர்களில் ராம்குமாரின் புகைப்படங்களை “like” இட்டவர்கள் “comment” இட்டவர்கள் என்று ஒருவர் கூட ராம்குமாரின் மேல் சந்தேகப்படாததும் வினோதமே!

18) ஸ்வாதி பேஸ்புக், ட்விட்டர், வாட்சப், இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துபவராக இருந்துள்ளார். முகநூலில் 23-11-2013 அன்று "Feeling loved :) <3 " என்று பதிவு போட்டுள்ளார், குறிப்பாக சமீபத்தில் இன்ஸ்டாக்ராமில் பெங்களூர் தர்ஷினி உணவகத்திலிருந்து "lost my fav ring   misng t a lot  " என்றும் பதிவிட்டிருக்கிறார். இந்த பதிவுகள் சாதாரணமானவைகளாக கூட இருக்கலாம். ஆனால் இந்த வழக்கின் தன்மை கருதி எந்த சூல்நிலைகளில் ஸ்வாதி அந்த பதிவுகளை பதிவிட்டார் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனரா?

19) முகநூலில் வேறு ஏதேனும் முக்கிய தடயங்கள் கிடைக்கிறதா என்று தீர விசாரிக்கும் முன் அவசர கதியில் ஸ்வாதியின் முகநூல் பக்கத்தை முடக்கியதன் காரணம் என்ன?

20) ஸ்வாதியின் முகநூல் பக்கம் அவரது தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க முடக்கப்பட்டாதாக கூறப்படுவது உண்மை என்றால் கொலையாளியை பிடிக்க முனையாமல் கொலையாளியை நெருங்க உதவும் கருவிகளை முடக்க நினைத்ததன் காரணம் என்ன?

21) ஸ்வாதி அவரது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகள் என்று கூறப்படுகிறது. இது உண்மை என்றால் இந்த கொலை அவர்களது குடும்ப பிரச்சனையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விடாமல் ஒருதலை காதல் என்று மட்டும் தீவிரமாக விசாரித்ததின் பின்னணி என்ன?

22) ஸ்வாதியின் அப்பா மகள் இறந்து கிடந்ததை பார்த்து அழுததை விமர்சிப்பது முறையாகாது. ஆனால் போலீசார் இதை ஏன் ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் ஸ்வாதியின் தந்தையை தீவிரமாக விசாரிக்கவில்லை?

23) கொலையாளியை பிடிப்பதற்கு முன்னரே ஸ்வாதியின் தந்தை, விசாரணை என்ற பெயரில் காவல்துறை தன் குடும்பத்தாரை தொந்தரவு பண்ணக்கூடாது என்று முதலமைச்சருக்கு அவசரமாக மனு செய்ததன் பின்னணி என்ன?

24) சுவாதியின் பெண் தோழி ஒருவர் முகநூலில் பழக்கமான நண்பர் ஒருவரிடம் ஸ்வாதி சில லட்ச ரூபாய் பெற்றதாகவும் அதனால் சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இது உண்மையா? அந்த நண்பர் யார்? அவருக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு? இதை ஏன் போலீசார் தீவிரமாக விசாரிக்கவில்லை?

25) ஸ்வாதி ஒருவரை காதலித்து பின்னர் பிரிந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவர் காதலித்த அந்த நபர் யார்? ஸ்வாதிக்கும் அவர் முன்னால் காதலருக்கும் பிரச்சனைகள் இருந்திருக்கலாம். அப்படி இருக்கும் பச்சத்தில் அந்த நபரை ஏன் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை?

26) ஸ்வாதி தன்னை யாரோ ஒருவன் பின் தொடர்வதாக தோழி, தோழன், அக்கா மற்றும் அப்பா ஆகியோரிடம் கூறியதாக தெரிவித்தனர். ராம்குமாரின் கைதுக்கு பின்னர் ராம்குமார்தான் ஸ்வாதியை சில காலமாக பின் தொடர்ந்த நபர் என்றும் அதனை ராம்குமாரே ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இது உண்மையெனில் ஏற்கனவே அறிமுகமான ராம்குமாரைப் பற்றி ஸ்வாதி அவர்களிடம் கூறாமல் இருந்திருப்பாரா? அப்படியே ஏதாவது காரணம் கருதி ராம்குமாரின் அடையாளத்தை அவர் மறைத்திருந்தால் அந்த காரணம் என்ன? இந்த பிரச்சனையை ஏன் ஸ்வாதியின் நண்பர்களோ அல்லது உறவினர்களோ காவல்துறையின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை?

27) ராம்குமார்தான் ஸ்வாதியை பின் தொடர்ந்து கண்காணித்தவர் என்றால் அவர் தான் தங்கியிருந்த மேன்ஷனில் இருந்து தினமும் காலை மணி 6லிருந்து 6.30க்குள் தன் அறையை விட்டு கிளம்பியிருக்க வேண்டும். ராம்குமார் மேன்ஷனில் இருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைவதற்கு இருக்கும் வழிகளில் உள்ள சி.சி.டி.வி. காமெராக்களில் கொலைக்கு முந்தைய நாட்களில் ராம்குமாரின் உருவம் பதிவாகியுள்ளதா என்று விசாரிக்கவில்லையே ஏன்? அனைத்து சி.சி.டி.வி காமெராக்களையும் ஆராயவில்லை என்றாலும் கொலையாளி என்று சந்தேகிக்கப்பட்ட உருவம் பதிவான அந்த குறிப்பிட்ட காமெராவிலாவது முந்தைய நாட்களில் அதே உருவமோ அல்லது ராம்குமாரின் உருவமோ பதிவாகி இருந்ததா என்று ஏன் ஆராயவில்லை?

28) சூர்யபிரகாஷ் என்ற நண்பர் மூலமாக ஸ்வாதியின் நட்பு கிடைத்ததாக ராம்குமார் கூறியிருக்கிறார். யார் அந்த சூர்யபிரகாஷ்? அவரை ஏன் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை?

29) ஸ்வாதி இறந்த இரண்டு நாட்களுக்குள் பிலால் மாலிக்தான் குற்றவாளி என்று இணையத்தில் செய்தி பரவ என்ன காரணம்? அச்செய்தியை பரப்பியது யார்? அவர்களைப் போலீசார் கண்டுபிடிக்காதது ஏன்?

30) பெங்களூரை சேர்ந்த பிலால் மாலிக் ஸ்வாதி கொலையான அரை மணி நேரத்திற்குள் எப்படி சம்பவ இடத்திற்கு வந்தார்?

31) பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடம், பொது நண்பர்கள் இப்படி எந்த தொடர்பும் இல்லாமல் பெங்களூரைச் சேர்ந்த பிலால் மாலிக் ஸ்வாதிக்கு அறிமுகமானது எப்படி? சென்னை இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு முன் ஸ்வாதி பெங்களூரில் ட்ரைனிங் எடுத்தவர் என்பதும், சென்னை வந்த பிறகும் அடிக்கடி அவர் பெங்களூர் செல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

32) பிலால் மாலிக்கிடம் ஸ்வாதிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் அவர் திணறியது ஏன்? வெறும் நண்பர்களாக இருக்கும் பச்சத்தில் அதை தைரியமாக அவர் கூறியிருக்கலாமே?

33) ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றோர் இது ஒரு முஸ்லிமினால் செய்யப்பட்ட கொலை தான் என்று பேட்டி கொடுத்தது ஏன்? அவர்களுக்கும் இந்த கொலை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்? எது அவர்களை இப்படிக் கூற வைத்தது?

34) இவ்வளவு சந்தேகங்கள் பிலால் மாலிக்கின் மேல் எழுந்தும் அவரை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்? அவரது தொலைபேசி பதிவுகள், வீடு போன்றவை சோதனைக்கு உட்படுத்தப்படாதது ஏன்?

35) முதலில் கொலையாளி பயன்படுத்திய ஆயுதம் என்று சந்தேகிக்கப்பட்ட அரிவாள் கர்நாடகா மாநிலத்தில் பயன்படுத்தப்படுவது என்று அறிவித்ததை, ராம்குமாரின் கைதிற்கு பின் அது திருநெல்வேலியில் பயன்படுத்தப்படும் அரிவாள் என்று அறிவித்தது எப்படி?

36) ஸ்வாதியின் பிரேத பரிசோதனை அறிக்கை எங்கே? அதில் என்ன கூறியிருக்கிறது என்ற தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது எதனால்?

37) பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்வாதி கொலையுண்டது போலீசார் வசம் உள்ள ஆயுதத்தால் தான் என்று ஊர்ஜிதப் படுத்தப்பட்டுள்ளதா?

38) ராம்குமார் தான் அந்த அரிவாளை பக்கத்து தோட்டதில் இருந்து திருடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த பக்கத்து வீட்டு ஆட்கள் யார்? அந்த அரிவாள் தங்களுடையது என்று ராம்குமாரின் அண்டை வீட்டார் யாரேனும் அடையாளம் கண்டுள்ளனரா?

39) அந்த அரிவாளில் இருந்து ஸ்வாதியின் ரத்தமோ ராம்குமாரின் கைரேகையோ கண்டறியப்பட்டுள்ளதா?

40) கொலை செய்து விட்டு ரத்தம் படிந்த சட்டையுடன் ராம்குமார் மேன்ஷனிற்குள் நுழைந்திருந்தால் வழியில் யார் கண்ணிலாவது சிக்கியிருப்பார். ஒருவேளை முன்னேற்பாடோடு வேறு சட்டை ஒன்றை அவர் எடுத்து சென்றிருந்து அதை மறைவிடம் வந்து மாற்றி இருந்திருக்கலாம். அப்படி மிக ஜாக்கிரதையாக திட்டம் தீட்டியவருக்கு ஏன் அந்த சட்டையை அழிக்க தோன்றவில்லை? ஸ்வாதியின் ரத்தம் படிந்த ராம்குமாரின் சட்டையை ராம்குமாரின் வீட்டில் கைப்பற்றியதாக போலீசார் அறிவித்துள்ளனர். ஒரு வார காலமாகவா ராம்குமார் அந்த சட்டையை பத்திரப்படுத்தி வைத்திருந்திருப்பார்? அதை அழித்திருக்க அவருக்கு போதிய அவகாசம் இருந்ததல்லவா? அப்படி இருக்கையில் அதை ஏன் ராம்குமார் அழிக்காமல் வைத்திருந்தார்? தான் ஆடு மெய்க்க போனபோது ஒரு குழியைத்தோண்டி புதைத்திருக்கவோ அல்லது எரித்திருக்கவோ வாய்ப்பிருக்கிறதே? அதை ஏன் அவர் செய்யவில்லை?

41) ஸ்வாதியின் செல்போனை ராம்குமாரின் வீட்டில் கண்டெடுத்ததாக கூறுகின்றனர். ராம்குமாரின் செல்போனை புகைப்படமெடுத்து பத்திரிக்கைகளில் வெளியிட்ட போலீசார் ஏன் ஸ்வாதியின் செல்போனை அதே போல வெளியிடவில்லை? உண்மையிலேயே ஸ்வாதியின் செல்போன் ராம்குமார் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதா? அது இப்போது எங்குள்ளது? அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் யாவை? வாட்சப் மூலமாக நான் ஸ்வாதியிடம் பேசுவேன் என்று ராம்குமார் கூறியது உண்மை என்றால் என்கிரிப்ஷன் முறையில் பழைய வாட்சப் குறுஞ்செய்திகளை ஸ்வாதியின் செல்போனில் இருந்து கண்டெடுக்க முடியும். அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? ஆமாம் என்றால் அதில் இருந்து தெரிந்து கொண்ட உண்மைகள் யாவை?

42) ஏற்கனவே போலீசாரால் ஸ்வாதியின் டூப்ளிகேட் சிம்கார்டு எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பெங்களூர் எண்ணிற்கு மட்டும் ஸ்வாதி அதிக அளவில் பேசியதாகவும் குறுஞ்செய்திகள் பரிமாறிக்கொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. அது ராம்குமாரின் எண் இல்லை. அந்த எண் யாருடையது? அந்த குறுஞ்செய்திகள் என்ன என்று கண்டுபிடிக்கப்பட்டதா? அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா? அது பிலால் மாலிக்கின் எண்ணா? சுற்றி சுற்றி பெங்களூருக்கும், பிலால் மாலிக்கிற்கும் சுவாதியின் அப்பாவிற்க்கும், இந்த கொலை சம்பவத்திற்கும் ஏதோ ஒரு முக்கிய தொடர்பு இருப்பது போலவே தோன்றினாலும் இந்த கோணத்தில் காவல்துறை தீவிரமாக விசாரிக்காதது ஏன்? அந்த கோணத்திலும் விசாரித்தோம் என்றால் ஏன் அந்த பெங்களூர் மர்ம நபர் (பிலால் மாலிக்காகவும் இருக்கலாம்) காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்படவில்லை? அதே போல ஸ்வாதியின் கம்ப்யூட்டரை கைப்பற்றி விசாரித்ததாக கூறினார்களே, அதில் கிடத்த தகவல்கள் என்ன?

43) உண்மைகள் இவ்வாறு இருக்க ஸ்வாதியை பின் தொடரும் நோக்கத்தோடு ராம்குமார் சென்னைக்கு வந்திருந்தால் தனது சரியான முகவரியை மேன்ஷனில் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? காதலுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கொன்று விடலாம் என்ற நோக்கத்தோடு அரிவாளை திருடிக்கொண்டு வந்தவன் முன்னெச்சரிக்கையாக போலி முகவரி கொடுத்திருந்திருக்கலாமே? அல்லது ஏ.எஸ்.மேன்ஷனை காலி செய்து போலி முகவரியுடன் வேறு அரை எடுத்து தங்கி இருக்கலாமே?

44) ஒருவேளை ராம்குமார் கொலை செய்திருந்தால் மேன்ஷனில் தன்னை பற்றிய முழு விபரம் உள்ளதால் போலீஸ் எப்படியும் தன்னை நெருங்கி விடும் என்ற எண்ணம் வந்திருக்காதா? நெல்லை வந்த ராம்குமார் வட மாநிலத்திற்கு ரயில் ஏறி இருந்திருக்கலாமே? அதற்கு போதிய அவகாசம் இருந்தது தானே?

45) ஏ.எஸ்.மேன்ஷனின் 404 என்ற அறையில் ராம்குமாரின் பொருட்கள் குறைந்த அளவே இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் ராம்குமார் கொலை செய்து விட்டு சொல்லாமல் கொள்ளாமல் நெல்லைக்கு கிளம்பி இருந்திருக்கும் பட்சத்தில் அவரது resume மற்றும் வீட்டு முகவரி சம்மந்தப்பட்ட விவரங்களை உடன் எடுத்து சென்றிருக்கலாமே? தடயங்களை ஏன் விட்டுச்செல்ல வேண்டும்?

46) இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, ராம்குமாரின் வீட்டிற்குள் நுழையும் முன் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் என்ன? நன்றாக தூங்குபவர்களும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எழுந்து விடுவார்கள், வெளியே உண்டாகும் ஒவ்வொரு அசைவும் தெளிவாக வீட்டினுள் இருப்பவர்களுக்கு தெரிந்துவிடுமே என்று கூடவா போலீசாருக்கு தெரியவில்லை? மின்சார வெளிச்சத்தில் சுற்றி வளைத்திருந்தால் “ஆபரேஷன் ராம்குமார்” இன்னும் எளிதாக முடிந்திருக்குமே?

47)  ராம்குமார் வீட்டினுள் நுழையும் போது ராம்குமாரை முத்துகுமார் என்று போலீசார் குறிப்பிட என்ன காரணம்? தீவிரமாக நோட்டம் இட்டு பிடிக்கப்பட்ட நபரின் பெயரை கூடவா போலீசார் சரியாக தெரிந்து வைத்திருக்கவில்லை?

48) ராம்குமார் போலீசாருக்கு பயந்து தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது என்ற சம்பவம், ராம்குமார் தான் கொலையாளி என்று நம் எல்லாரையும் நம்ப வைத்தது. ஆனால் உண்மையிலேயே ராம்குமார்தான் தன் கழுத்தை அறுத்துக்கொண்டாரா? பதட்டத்திலும் அளவெடுத்த மாதிரியா ஒருவன் தன் கழுத்தை அறுத்துக்கொள்வான்? தூங்கிக்கொண்டிருக்கும் போது ஒருவன் பிளேடை கையில் வைத்துக்கொண்டே தூங்க முடியுமா? மின்சாரம் இல்லாதபோதும் சரியாக பிளேடை தேடி எடுக்கும் அளவிற்கு ராம்குமாருக்கு அவகாசம் இருந்திருக்குமா? ராம்குமாரே தற்கொலைக்கு முயன்றிருந்தாலும் உட்காரவைத்து புகைப்படம் எடுக்கும் அவகாசம் போலீசாருக்கு எப்படி கிடைத்தது?

49) ராம்குமாரின் வீட்டு பெண்களை கட்டாயப்படுத்தி புகைப்படம் எடுத்து அவசர அவசரமாக செய்திகளில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? அது ராம்குமாரை எந்த வகையேனும் மிரட்டும் முயற்சியோ? ராம்குமாரை புழல் சிறையில் அடைக்கும் வரை ராம்குமாரின் பெற்றோர் ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை?

50) உண்மையில் ஸ்வாதி கொலை வழக்கில் என்னதான் நடக்கிறது? ஏன் இத்தனை விடை தெரியா கேள்விகள்? இவைகளுக்கு விடை அறிய முயலாத போலீசாரின் அலட்சியம் ஏன்?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் நேர்மையான பதில்கள் காவல்துறையிடம் இருந்தால் நிச்சயமாக ராம்குமார்தான் குற்றவாளி என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இருப்பின் ராம்குமார் இந்த கொடூர கொலைக்கான சரியான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். ராம்குமார் தனியாக செய்திருந்தாலும் சரி, கூட்டுச்சதி செய்திருந்தாலும் சரி, தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஒருவேளை இந்த கேள்விகளுக்கு காவல்துறையிடம் பதில்கள் இல்லையெனில், வேகமாக இவ்வழக்கை முடிக்கும் நோக்கத்தில் நீதியை சாகடிக்கும் மெத்தனத்தை, யாரையோ எதற்காகவோ காப்பாற்ற முயலும் முனைப்பை, பொது மக்களின் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். ராம்குமார் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டிருப்பின் நாளை நமக்கும் இந்த நிலைமை வரலாம்.

"விழித்துக் கொள்வோம்"
வாய்மையை வெல்லச் செய்வோம்!
  - வள்ளிநாயகம் சுட்கி
(வழக்கறிஞர் -நெல்லை)

நன்றி:
-மூத்த வழக்கறிஞர்கள்
-இணையதள நண்பர்கள்
-Rethu choco

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக