மீள முடியவில்லையே....
21.04.2016 அன்று மாலை என் அருமை மைத்துனர் கவிஞர் வைகறை அவர்கள் இறந்தார் என்ற துயர செய்தியை கேட்டு அதிர்ந்து போனேன். இன்று வரை அதிலிருந்து மீள முடியவில்லை. இறுதிச்சடங்கில் (22.04.2016) நான், எழுச்சிக்கவிஞர் கீதா அம்மா, கவிஞர் மீரா செல்வக்குமார், கவிஞர் புதுகைப்புதல்வன், கவிஞர் மகேஸ்வரி, மைத்துனர் கவிஞர் நாணற்காடன் ஆகியோர் கலந்து கொண்டோம். சென்று வந்ததிலிருந்து உடல்நலக்குறைவாலும் மன உளைச்சலிலும் வெகுவாகவே பாதிக்கப்பட்டு இருக்கிறேன்...
எனது "முதல் பரிசு " சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில் கதாநாயகனே இவர்தான். இவர் துணையின்றி ஒரு அணுவும் அசைந்திருக்காது. அண்ணன் முகேஷ் அவர்களும் எனக்கு துணையாக இருந்தார்.
கைப்பிரதி நூல் உள்பட நான்கு நூல்களை இதுவரை எழுதி வெளியிட்டு உள்ளார். ஐந்தாவது நூல் தயாராக உள்ளது. வெளியிடுவதற்குள் சென்றுவிட்டார். இருந்திருந்தால் இவரால் இன்னும் ஓராயிரம் பேர் வெளியுலகிற்கு தெரிந்திருப்பார்கள். தமிழ் உலகிற்கு இன்னும் ஆயிரமாயிரமாய் கவிதைகளை எழுதி குவித்திருப்பார். எனது கவிதை நூல் இந்த மாதம் (மே மாதம்) வெளிவர இருக்கிறது. அதை எப்படி நான் என் மைத்துனர் இல்லாமல் வெளியிட போகிறேன் என்று செய்வதறியாது தவிக்கிறேன்.
இவர் இல்லாத இலக்கிய உலகை என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. என் தங்கை ரோஸ்லினும் என் மாப்பிள்ளை ஜெய்குட்டியும்..... நினைத்து பார்க்கையிலே அழுகை என் மூச்சை அடைக்கிறது.
நான் முதலில், கவிஞர் முத்துநிலவன் அய்யா, கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா, கவிஞர் பொன்.க அய்யா, கவிஞர் ராசிபன்னீர்செல்வம் அய்யா, கவிஞர் நீலா அம்மா, கவிஞர் சுவாதி அம்மா இவர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அதையும் கடந்து எண்ணிலடங்கா இதயங்களில் இடம்பிடித்தார். அந்த இதயங்கள் அனைத்தும் இன்று கண்ணீரால்.....
தமிழ் இலக்கிய உலகு ஒரு மாபெரும் கவிஞரை இழந்துவிட்டது. இதுதான் உண்மை ....
அந்த வேதனையிலிருந்து என்னால் மீண்டு வர முடியாமல் தவிக்கிறேன். முயற்சிக்கிறேன் என்னை நானே தேற்றிக்கொள்ள... ஆனால் அவரின் நினைவு ஒருபோதும் நீங்காது.
நீங்கா நினைவுகளுடன்.....
மைத்துனர் சோலச்சி புதுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக