திங்கள், 28 செப்டம்பர், 2015

எனது "முதல் பரிசு" சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில்- சோலச்சி


எங்கே போகுது பயணம்


     வளர்ந்த நாடுகள்; வளரும் நாடுகள் என்று பிரித்து மார்தட்டிக் கொள்கிறோம். வளர்ச்சி என்றால் என்ன? எதன் அடிப்படையில் இப்படிப் பிரிக்கிறோம்? பொருளாதாரம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பாகுபாட்டில் வகுக்கின்றோம். எப்படி பிரித்தாலும், எப்படி வகுத்தாலும் சுற்றுச்சூழல் என்று பார்க்கின்ற பொழுது நாம் அனைவருமே தலை குனிந்து போகின்றோம்.
     மேலைநாட்டு பொருளாதாரத்தின் மேன்மைகளை எல்லாம் கட்டுரையாக எழுதி தொகுத்த போது அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு 15 வயது. அறிவின் இலக்கணமாக போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தற்போது இருந்திருந்தால் சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு நாடுகளின் அவல நிலையை தொகுத்து வழங்கி இருப்பார்கள். அந்த அவல்நிலையைப் போக்க நாம் ஒவ்வொருவரும் முன்நிற்க வேண்டும்.
     ஒருமனிதனுக்கு சுய மரியாதை எவ்வளவு முக்கியமோ அதே முக்கியத்துவம் சுற்றுச்சூழலுக்கும் இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை மறந்தோமானால் விரைவில் பூமியின் சுழற்சியே நின்றுவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.
     சில வருடங்களுக்கு முன்னால் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் நெற்பயிரின் வேரை அரைத்துக் குடித்தால் விரைவில் இறப்பு உறுதி என்றும் அந்த வேரில் நச்சுத் தன்மை அளவுக்கு அதிகமாய் கலந்து இருப்பதையும் உறுதிப் படுத்தி உள்ளது. வேர் நச்சுத் தன்மையென்றால் அது விளைவிக்கும் உணவு எவ்வளவு கொடிய விஷத்தை தாங்கி இருக்கும் என்பதை உணர முடிகிறது அல்லவா?
     சில ஆண்டுகளுக்கு முன்னால் அரிசியை ஊற வைக்காமல் சமைத்தோம். இன்று ஊற வைத்து சமைக்கும் அவல நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம். நாகரிகம் எனற பெயரால் நானிலத்தை நலிவடையச் செய்து விட்டோம். “விட்டு விட்டு போகுது மூச்சு; விட்ட உடனே சுட்டு விடப் போகிறார் சுற்றத்தார்.” என்பார் பைந்தமிழ் போற்றும் பட்டினத்தார் அவர்கள். நாம் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக நமக்கு வசதியாக இருந்தவற்ரை அழிக்கத் துணிந்து விட்டோம். நாம் வாழ்ந்தால் போதும்; ஊருக்கு மட்டுமே உபதேசம் என்ற மனநிலையின் விளைவுதான் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது.
                தலைமுறைகள் வாழ வேண்டும் எனபதற்காக நம் முன்னோர் இயற்கை வளங்களை பாதுகாத்து வைத்தனர். நாம் வாழ விட்டு வைத்ததை நாம் விட்டு வைக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை.
     மனசாட்சியே இல்லாமல் மரங்களை அழித்து மனைகள் உருவாக்கி கற்களையும், கருவை மரங்களையும் விளைவித்தோம். விளைச்சல் தந்த விளைநிலங்களைத் தோண்டி மீத்தேன் இன்னபிற எடுத்து பாலையாக்கினோம். தண்ணீர் வர வேண்டிய வாரிகளை தன்வசப்படுத்தினோம்; தண்ணீர் சேமிக்க வேண்டிய ஏரி, குளங்களை கையகப்படுத்தி இன்று கையாளாகாதவர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்.
     நமது வாழ்க்கைப் பயணமானது புதியன தேடி பயணிக்கிறது. பயணத்தில் புதியன கிடைக்கும் என்பது உறுதி என்றாலும் அவற்றை அனுபவிக்க நாம் இருக்க வேண்டுமல்லவா!
     தூய்மை இந்தியாவை நோக்கிப் பயணம் செய்து கொண்டு இருக்கின்றோம். தூய்மை இந்தியா என்றால் சாலையில் கிடக்கும் காகிதக் குப்பைகளையும் இலைதழைகளையும் அப்புறப்படுத்துவது தானா? அப்படியானால் பாலீத்தீன் குப்பைகளையும் இயந்திர மற்றும் மின்சாதனக் கழிவுகளையும் என்ன செய்வது? தூய்மை என்றால் மண்ணையும் காப்பாற்றுவது தானே. இன்று பக்கத்துத் தெருவில் கழிவுகளைக் கொட்டி விட்டு என் தெரு சுத்தமாக இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்கிறோம்.
     ஓசோன் படலத்திற்கும் உயிர்களுக்கும் ஆபத்து விளைவிக்காத எரிவாயுவை கண்டுபிடிக்க முன்வர வேண்டும். மக்காத மண்ணுக்கு தீங்கு தரக் கூடிய பொருட்களை உற்பத்தி செய்ய தடை விதிக்கவும் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டவற்றை மட்டும் மறுசுழற்சி செய்யவும் வழி வகுக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி மண்னைக் காப்பாற்ற வேண்டும். ஒவ்வொருவரும் 10 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டுமென்று கட்டாயச் சட்டம் கொண்டு வர வேண்டும்,
     நமது பயணம் ஏனோ தானோ என்று இருக்குமானால் நமது விஞ்ஞானம் மட்டும் நிலைத்திருக்கும். அந்த விஞ்ஞானத்தோடு விளையாட நாம் இருக்க மாட்டோம். நமது பயணம் நானிலத்தை மலரச் செய்வதற்காகவே அமையட்டும். அப்போது தான் நாம் மலர்வோம்!


குறிப்பு:-
@ "எங்கே போகுது பயணம்" எனும் இக்கட்டுரையானது "வலைப்பதிவர் சந்திப்பு-2015" நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது. வகை: கட்டுரைப் போட்டி- சுற்றுச்சூழல்.( பிரிவு-2)
@ இக்கட்டுரையானது எனது சொந்தப் படைப்பு எனவும், வேறு எந்த இதழ்களிலும் வெளியிட வில்லை யெனவும் உறுதியளிக்கிறேன்.

வியாழன், 24 செப்டம்பர், 2015

சோலச்சியின் சிதறல்கள்...


¤
வீட்டு வேலையும் விருந்தினர் உபசரிப்பும் காத்திருக்கிறது விளம்பர இடைவேளைக்காக..!
¤
குளங்கள் நிறைந்தன அட... மனைகளால்..!
¤
பட்டாசு ஒலியிலும் பக்குவமாய் ரசிக்கப்படுகிறது மழலையின் சிரிப்பொலி..!
¤
எல்லோரையும் வாழவைக்கிறது தமிழகம்... தமிழனை காவு கொடுத்தபடி..!
¤
இன்னும் நடக்கிறது கிராம வழக்குகளில் நீதிபதியாய் பல்லிகள்..!
¤
நல்ல வருமானத்தில் கடவுள் ஆண்டியாகவே மக்கள்..!
¤
விறுவிறுப்பாய்
நடக்கிறது கல்வி வியாபாரம்..!
¤
எரிந்துகொண்டேதான் இருக்கிறது தவிப்பில் ஆய்வாளர்களும் சாதி..!
¤
எட்டுமணிநேரம் தூங்கணுமாம் உள்ளே நீ உறக்கமின்றி நான்..!
¤
காணாமல் போனது திரிகை மட்டுமல்ல தாத்தா பாட்டியும்தான்..!
-சோலச்சி புதுக்கோட்டை

விழித்தெழடா தோழா..! - சோலச்சி

மானமுள்ள மனித இனமே
மதுவால் அழியுது உன் இனமே இன்னும் தூங்கி கெடக்குறீயே சத்தியமா சாபக்கேடா...!
ஊருக்கொரு பள்ளிக்கூடம் திறந்து வச்சவர் பெருந்தலைவர் தலைகுனிஞ்சு வாழ்ந்த நம்மை தலை நிமிரச் செய்தவர் தந்தைபெரியார் இவங்க வாழ்ந்த பூமியிலே மது முட்டுக்கட்டை போடுதடா-அதுக்கு முடிவு கட்ட வேணுமடா...!
நெல் விளையும் பூமியத்தான் பாலையாக்க துணிஞ்சுட்டானே ஒருமைப்பாடு பேசுறோமே வாழ தண்ணி கொடுக்க மறுக்குறோமே வெந்து நொந்து வாழயிலே மது மேலும் வேதனை கொடுக்குதடா குடும்பம் நடுத்தெருவில் நிற்குதடா..!
ஒழச்ச காசு வீட்டுக்கில்ல ஒட்டுத்துணிக்கும் வழியுமில்ல சண்டை வம்பு வீட்டுலதான் சந்தி சிரிச்சு போகுதடா வாழப்பிறந்த தலைமுறையோ வழி இழந்து தவிக்குதடா - தோழா இன்னும் விழிக்க மறுக்குறீயே..!
-சோலச்சி புதுக்கோட்டை

@ வலைப்பதிவர் சந்திப்பு மின்னிலக்கிய போட்டிக்காக எழுதப்பட்டது. 4.புதுக்கவிதை வகை.
@ இக்கவிதை வேறு எந்த ஊடகத்திலும் வெளியாக வில்லை என
உறுதி கூ றுகிறேன்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

கண்டனம்

தலித்துகள் தாக்கப்படுவதும் படுகொலை செய்யப்படுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி உள்ளது. பரமக்குடியில் ஆறுபேர் சுட்டுக்கொலை, தர்மபுரி இளவரசன் படுகொலை, தர்மபுரி கலவரம், திருச்செங்கோடு டிஎஸ்பி படுகொலை....,, எங்கே இருக்கிறோம் நாம்..
தமிழக அரசின் நிலைப்பாடுதான் என்ன...
சாதி வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு தலித்துகளை படுகொலை செய்வதுதான் வேலையா..
தலித்துகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அரசு எடுத்து நடவடிக்கை என்ன?
மேடை போட்டு சாதி வெறியை தூண்டுபவர்களுக்கு துணையாக சாதி இந்து வெறியர்களுக்கு துணையாக அரசு செயல்படுகிறதா?
இதுவரை சட்டத்தால் தண்டிக்கப்படாததன் விளைவுதான் சாதிய இந்துக்கள் தலைதூக்கி ஆடுகிறார்கள்...
தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்..
அரசு நேர்மையாக செயல்படவேண்டும்..
தலித்துகள் தலைநிமிர்ந்திட வேண்டும்..
தமிழக அரசே! சாதிய இந்து வெறியர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடு..

வியாழன், 17 செப்டம்பர், 2015

கோயில்கள் வாழ்க - சோலச்சி

"என் தாய் அவ்வப்போது
கோயிலுக்கு அழைத்துப்போவாள்
இறைவழிபாட்டுக்கு அல்ல...
இலவச உணவை
உண்டு மகிழ..!
நான் இறைவனை
வணங்குவதைவிட - நல்ல
இதயங்களைத்தான்
அதிகம் வணங்குவதுண்டு..!
இல்லாமல் இருப்போருக்கு
இருப்பதை கொடுப்போரை
தடுக்காதே..!
தோழா...
நேயம் கொண்டால்
நீதான் இறைவன்..!
நியாயம் கண்டால்
நீதான் தலைவன்..!"
-சோலச்சி
புதுக்கோட்டை

தேசம் அழிகிறது - சோலச்சி

"வானம் பொய்த்தது
விளைநிலங்கள்
வீடுகளாக காய்த்தது..
நீரின்றி நீரோடைகள்
முற்செடிகளாக...
முனிவர்கள் முடிதுறந்து
போலிசாமியார்களின்
பிடியில் ஆட்சி..
தவக்கலை மாறி
காமக்கலையும்
கொலைக்கலையும்...
நிவாரண உதவிகளும்
நிர்வாணமாய்...
ஆறுதல் மொழிகளும்
அரசியலாய்...
தேசம் அழுகிறது
இல்லை... இல்லை...
தேசம் அழிகிறது.....!"
-சோலச்சி
புதுக்கோட்டை

..சீ..சீ..சீ... - சோலச்சி


"ஆயிரமாயிரமாய் அறிவிப்பு
விளம்பர தட்டிகள் மட்டுமே
காசு பார்ப்பு...
இங்கு மட்டும்
அழகாய் வெடிக்கிது
மத்தாப்பு...!"
-சோலச்சி
புதுக்கோட்டை